Freitag, 2. Oktober 2015

இலக்கு / Sucess


_________________________________________________________________


அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது. இத் தீர்மானம் இலங்கையின் இராஐதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியா? அல்லது நீதிகோரும் தமிழர்களிற்கு கிடைத்த ஏமாற்றமா? தமிழர்களிடையும் சிங்களவர்களிடையேயும் பரவலாக விவாதிக்கும் செய்தியாக உள்ளது. இத்தீர்மானம் பற்றியோ அல்லது அரசபயங்கரவாதத்திற்கான விசாரனை பற்றியோ அல்லது சர்வதேச நீதி விசாரனை போன்ற விடயங்களை விவாதிப்பதற்கு முன்னர் தமிழராகிய நாம் எமது அபிலாசைகள் எதிர்பார்ப்புகள் அரசியல் தீர்வுபோன்ற பல் வேறுவிடயங்களை பற்றி நாம் எம்மை நாம் புடம்போட்டுக்கொள்ளல் வேண்டும். அவ்வகையில் சில பல கேள்விகளையும் யாதார்த்த நிலைமையை கவனத்தில் கொண்டு எனது பார்வையை இங்கு பதிவிடுகின்றேன்.

இறுதி யுத்ததில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை ஏன் அவசியம்?
  1. குற்றத்தினை இழைத்த உரிய அரசியல்வாதிகளிற்கும் இராணுவவீரர்களிற்கும் தண்டனை வாங்கி கொடுப்பது.
  2. இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை நிருபித்து சர்வதேசத்திடம் இருந்து அரசியல் தீர்வுபொதியை பெற்றுகொள்வதை சாத்தியமாக்குவது.
  3. இலங்கை அரசின் குற்றங்களை நிருபித்து பாதிக்கப்பட்டவர்களிற்கான உரிய வாழ்வாதாரங்களை நட்ஈடாக பெற்றுகொடுப்பது.
  4. இவ்விடயத்தினை ஓவ்வொரு வருடமும் பேசி அதிதீவிர தமிழ்தேசியத்தினை பேசி மீண்டும் ஓர் கடும்போக்கு அரசியலை அல்லது போராட்டத்தினை சாத்தியப்படுத்துவது.
இவ்வாறு பல்வேறு நிலைப்பாடுகளை பலதரப்புக்கள் பதிலாக வைத்திருக்கின்றனர். இது எவ்வாறு சார்த்தியம் என்பதனை ஆராயும் முன்னர் இன்னொரு கேள்வியினை தொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
யாரிடம் நாம் இந்நியாயத்தினை அல்லது நீதியை கோருகின்றோம்?
பதில் சர்வதேசம் என்பதே பலரின் பதிலாக அமையும். இதற்கு நாம் அடுத்த கேள்வியை தொடுக்கவேண்டும். இச் சர்வதேசம் யார்? இவர்களில் பலர் இலங்கை அரசுடன் ஒன்றிணைந்து இறுதியுத்ததினை நடாத்தியவர்கள். எவ்வாறு நாம் அநீதி இழைத்தவர்களிடையே நீதி கேட்பது என்ற கேள்வி எழுகின்றதல்லவா. அப்படியாயின் பதில் சர்வதேச காய்நகர்த்தலில் யுத்தின் பங்காளிகளின் இலங்கை சார்பு நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்நிலைமையை தமிழர்தரப்பு சாதகமாக பயன்படத்தி கொள்ளலாம் என்பதனையும் இரஐதந்திரரீதியான வாதமாக கொள்ளலாம். அவ்வாறாயின் சார்பு நிலைகள் மாறுவதற்கு காரணமாக காரணிகள் எவை என்ற கேள்வி எழுகின்றது. அதற்கான பதில்களாக யுத்தம் நடைபெறும்போது இலங்கை அரசு இந்திய சீன ஆதரவாளனாக இருந்தது. அன்றைய 9/11 சம்பவம் பயங்கரவாத ஓழிப்பு என்ற போர்வையில் உலகத்தில் அனைத்து போரட்டங்களை ஓடுக்கும் பெரும்பாண்மை கருத்தியலை அமெரிக்கா உருவாக்கியிருந்துது. இதனாலே இலங்கை அரசும் புலிகளினால் அனுப்பபட்ட விமானத்தினை கொழும்பு வரை அனுமதித்து இலங்கையும் இந்தியாவும் வேடிக்கை பார்த்து பயங்கரவாத ஓழிப்பு என்பதற்கு வலுவான சந்தர்பங்களை உருவாக்கினர். அதுமட்டுமல்லது புலிகளின் ஏனைய செயற்பாடுகளும் இதற்கு வலுவூட்டியது.

ஏன் யுத்ததின் பின்னர் இறுதியுத்ததினை நடாத்திமுடிந்தபங்காளிகள் வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தனர்? அனைவரும் அரசுகளிற்கு எதிரான போரட்டங்களை ஓடுக்குவதற்காக கைகொடுத்தனர். அத்துடன் தெற்காசியபிராந்தியத்தில் புலிகளை வைத்து தமது நலனை சாதிக்கும் நிலமை அற்றிருந்ததும் ஓர் காரணமாக அமைந்திருந்தது. அவ்வாறு ஓர் தேவை அன்று இருந்திருப்பின் புலிகளை ஓழிக்கும் நடவடிக்கை நடைபெற்றிருக்காது. இந்தியா புலிகளின் கடந்தகால செயற்பாடுளினால் புலிகளை அழிக்க கங்கணம் கட்டியிருந்த நிலமையும் அன்று முதன்மையாக காணப்பட்டது. யுத்ததின் பின்னர் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் முக்கிய நோக்கம் இலங்கையை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து அகற்றி தமது தலையீட்டினையும் ஆதிக்கத்தினை நீலைநாட்டுவது.

இந்நிலைப்பாட்டின் மாற்றத்தினாலே மகிந்த சாம்ராஐயம் ஓரம்கட்டப்பட்டு வேறு அரசு உருவாக்கப்பட்டது. இன்று இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கு ஆதரவான இலங்கை அரசின்மீது கடும் நெருக்கடிகளை கொடுக்க விரும்பாததினால் அமெரிக்கவினால் கொண்டுவரப்பட்ட சிறுது இறுக்கமான கலப்புநீதிமன்ற முறையினை கொண்டுவந்து பின்னர் இலங்கை அரசின் விருப்பத்திற்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகள் இணைந்த விசாரணை என்றுமாற்றி அமைக்கபட்டது. மற்றும் பல சொற்பதங்கள் மென்மையாக்கபட்டது. அதுமட்டுமன்றி புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களும் விசாரிக்கபடவேண்டும் என்ற விடயங்களும் உள்ளடக்கபட்டன.

போர்குற்ற விசாரனை என்றால் இருதரப்பு தவறுகளும் கண்டறியப்படவேண்டும் என்பது ஓர் பொதுவான நியதியாக இருந்தாலும் அன்றைய யுத்ததில் ஈடுபட்ட பல முக்கிய அல்லது பொறுப்பெடுக்கவேண்டிய புலிகள் பலர் உயிருடன் இல்லை. இது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி எழுகின்றது.

இக்குறைந்தபட்ச விசாரணை பொறிமுறை நன்மைபயக்குமா? இது ஓர் கண்துடைப்பா? இவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதா? அல்லது முடிந்தவரையில் நடைமுறைப்படுத்துவதா? அல்லது தனியே இலங்கை அரசிற்கு எதிரான கடும் எதிர்ப்பரசியலை நடாத்துவதா? போன்ற கேள்விகள் எம்மிடத்தில் ஏற்படுவது நியாமனது. ஆனால் எவ்வகையான வழிமுறை இராஐதந்திரமானது என்ற முக்கியமான கேள்விக்கு பதில்காண்பதே எம் முன்னே இன்று முன்னெழுந்திருக்கும் சவாலாக உள்ளது.

யுத்தகுற்றங்கள் கலப்புமுறை நீதமன்ற முறையிலான விசாரணைகளின் முடிவு ஆனாலும் பொதுநலவாய நாடுகளின் தலையீடுகளினூடாக பெறப்படும் விசாரணையின் முடிவானாலும் வெளிவரும் காலப்பகுதியில் நிலவும் அரசியல் சமூக நிலைமைகளே அம்முடிவின் போக்கினை தீர்மாணிக்கபோகின்றது.

சுவிற்சர்லாந்து அரசியலில் இடம்பெறும் சர்வஐன வாக்கெடுப்புகளில் அவ்விடயத்திற்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் கடும்பிரச்சாரத்தினை செய்தபோதும் ஓர் தரப்பு வெற்றிபெறுகின்றது. அன்றைய அரசியல் சர்வதேச நிலைமைகளின் போக்கும் இம் முடிவுகளில் கட்டாயமான தாக்கத்தினை செலுத்தியிருக்கும். தோல்வியுற்றவர்கள் அக்கருத்தினை அடுத்த கருத்துகணப்பு வரைக்கும் தொடர்ச்சியாக வேலை செய்வார்கள் சில வேளைகளில் அடுத்தகணிப்பில் வெற்றிபெறும்வாய்பு பெறுகின்றது.


எமது அரசியல் பாரம்பரியத்தில் முன்வைக்கும் கோரிக்கைகள் உடன் சார்த்தியப்பட வேண்டும் அல்லது நிராகரிப்பு. இந்த மனோநிலை மாற்றமடையவேண்டும் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை பெற்று உயர்ந்த இலக்கை அடையதொடர்ச்சியான செயற்பாடுகள் அவசியம். ஓர் ஆற்றங்கரையைகடக்க தனியே கயிறும் மரக்குற்றிகள் தான் கைவசம் இருப்பின் அவற்றை பயன்படுத்தி பாலத்தினை உருவாக்கி கரையினை அடையவேண்டும். இவற்றை மறுத்துவிட்டு நாம் மிக விரைவில் கொங்றீட் பாலம் அமைத்துதான் கரைசேர்வோம் என்று அடம்பிடித்ததால் எமது கண்முன்னே உள்ள கயிறையும் மரக்குத்திகளையும் பாவனைசெய்யாது கொங்றீட்பாலத்திற்காக காத்திருப்போமாயின் அவை உக்கி பிரயோசனமற்று போவதுமட்டுமல்ல கரையும்போய் சேர முடியாத நிலை உருவாகும். இன்றைய நிலைமைகளை கருத்தில் கொண்டு எல்லோரும் ஓன்றிணைந்து சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள ஓத்துழைப்புகளை நல்கி முடிவுகள் வரும் தருவாயில் அடுத்தகட்ட நகர்வுகளை தொடர்வதே புத்திசாலித்தனமானது. இவ்வகையில் கிடைக்கப்பெற்ற நல்ல சந்தர்பங்களை நழுவவிட்ட படிப்பினைகள் நிறைய எக்கு உண்டு. இலங்கை அரசின் அரசியல் நகர்வேயே நல்ல உதாரணமாக எடுத்துகொள்ள வேண்டும். இன்றைய இலங்கை அரசின் அபிவிருத்தி பொருளாதார திட்டங்களிற்கு ஏனைய உலகநாடுகளின் நிதி பொருளாதார முதலீட்டின் அவசியமும் கட்டாயமும் உள்ளது. இவை கருதியே தம்மீது முன்வைக்கபட்ட சிறுது கடுமையான நகலை திருத்தி தாமே ஆமோப்பிபதாக கையெழுத்து இட்டு மற்றைநாடுகளின் நற்பெயரை சம்பாதித்து கொண்டதே இலங்கைக்கு பெரிய வெற்றி. இவ்வகையில் நாமும் வழங்கப்பட்டுள்ள சிறிய மைதானத்தில் பல கோல்களை அடிப்பதற்கான தருணங்களை ஏற்படுத்துவதே சிறந்தது

Keine Kommentare:

Kommentar veröffentlichen