Freitag, 30. Oktober 2015

ருசிகண்ட பூனையும் சுவிற்சர்லாந்து தமிழர் நலன்புரி சங்கம் சொலத்தூண் (Tamil Welfare Association Solothurn)

புலிகள் கொடிகட்டி பறந்த நாட்களில் புலம்பெயர் நாடுகளில் எந்த வொரு சுயாதின அமைப்புகளையும் விட்டுவைக்கவில்லை. கோயில்கள் பத்திரிகைகள் கலை கலாச்சார மற்றும் விளையாட்டுதுறை எதனையும் விட்டுவைக்காது தமது பினாமி அமைப்பாக்கி தன்னகப்படுத்தி கொண்டனர். இவ்வமைப்புகளினால் சேகரிக்கப்படும் அனைத்து நிதியினையும் போராட்ட நிதியென அபகரித்து கொண்டனர். மேலும் ஓர் படி மேலாக தமது பினாமிகளை கொண்டு பல நிறுவனங்களையும் முதலீட்டு நிறுவனங்களையம் நடாத்திவந்தனர். இவ்விடயங்களை புலம்பெயர் வாழும் எந்த தமிழரும் நன்கு அறிவர்.

முள்ளிவாய்காலிற்குள் போரட்டம் முடக்கப்பட்டபின்னர் பல பினாமிகள் நிறுவனங்களை தமேக்கே சொந்தமாக்கி கொண்டனர். சேகரித்த பெரும்தொகை தனிநபர்களிடமே சொந்தமான பல ஆதாரங்களும் உள்ளன. இவ்வகையில் பொது அமைப்பினால் பெறப்பட்ட பெருந்தொகை நிதியில் தங்கி இருந்த புலத்து புலிகள். இன்றும் இந்நிறுவனங்களை தனித்து இயங்கவிடமால் இன்றும் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து தமது பினாமிகளை கொண்டு வருமானங்களை கபழிகரம் செய்ய பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

இவற்றுக்கு சான்று பகிரும் வகையில் கடந்த செப்ரம்பர் மாதம் சுவிற்சர்லாந்து நலன்புரி சங்கம் Solothurn ஓர் பொது குழுவினை ஏற்பாடு செய்திருந்தது. சங்த்தினை ஓர் சுயாதினகரமான அமைப்பைமாற்றுவதற்கான அடிப்படையில் சந்திப்பிற்கான அழைப்பு விடுவிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் சுவிற்சர்லாந்து கிளையில் செயற்பட்டு வருபவர்கள் ஓருசிலரும் இன்னும் பல ஆதரவாளர்களும் இணைந்து தமக்கு கீழ் அணிதிரளுங்கள் நாம் ஓர் புதிய நிர்வாகத்தினை நிறுவுவோம் என கோரிக்கை விடுத்திருந்தது. சந்திப்பிற்கான அழைப்பை விடுத்திருந்த பெரும்பான்மையான பழைய நிர்வாக சபை உறுப்பினர்களும் இவர்களை ஆதரிப்போரும் மற்றும் இச்சங்கத்தினை புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுப்பிக்க விரும்பியோர்களும் தனியே சந்திப்பினை ஓரே மண்டபத்தில் மேற்கொண்டனர். இதன் போது இருதரப்பினர்களாலும் வாக்குவாதங்கள்  இடம்பெற்ற மண்டபத்தினையே அதிரவைத்தது. பாதுகாவலிற்காக தனியார் பாதுகாப்பு சேவையாளர்களும் ஒன்றுகுவிக்கபட்டிருந்தனர். இதன் போது இரண்டு தரப்பினரும் இரண்டு புதிய செயற்குழுவினை தெரிவுசெய்தனர்.

சுயாதீனத்தினை விரும்புவர்கள் தமது சங்கத்தின் யாப்பிற்கு இணங்க தமது சங்த்தினை பதிவு செய்து கொண்டனர். இதனை கேள்விப்பட்ட மற்றைய தரப்பினரும் அதே சங்கத்தினை தமிழ் பெயரில் பதிந்துகொண்டனர். ஏன் இந்த சங்கத்தின் மேல் இவ்வளவு கரிசனை என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். நலன்புரி சங்கத்தினரே கடந்தகாலங்களில் பாரிய போட்டி சுவிற்சர்லாந்து தழுவிய நிகழ்ச்சியான நாட்டிய மயில் இசைக்குயில் போன்ற நிகழ்ச்சியை நடாத்தி வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கிடைத்த அனைத்து வருமானங்களும் புலத்து புலிகளின் வேலைத்திட்டங்களிற்காக கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இச்சங்கம் சுயாதீனமாக செயற்பட்டால் இவ்வகையான நிகழ்ச்சி மூலமாக கிடைக்கப்படும் பணத்தினை சங்கமே நிர்வகிக்கும் தமது கயான காலியாகிவிடும் என்ற உள்நோக்கமே இவ்வகையில் சங்கத்தின் பதிவிற்கு எதிரான எதிர்பதிவினை செய்து சுயாதீனமானவர்களை செயற்படவிடாமல் தடுக்கம் நடவடிக்கையாகும்.

சுவிற்சர்லாந்தில் இயங்கிவந்த புலிகள் கடந்த இறுதியுத்தத்தின் போது ஓவ்வொரு தமிழர்களிடம் இருந்து ஓரு இலட்சம் சுவிஶ் பிராங்குகளை சேகரித்தனர். யுத்த முடிவிற்கு பின்னர் தாம்  வாங்கிய ஓரு இலட்சம் வங்கி கடனை அடைக்கமுடியாது பல தமிழர்கள் இன்னலுக்கு உள்ளனர்.
யுத்த முடிவிற்கு பின்னர் பணத்தினை திருப்பி கொடுக்குமாறு புலி அமைப்பாளர்களிடம் கோரியிருந்தனர்.

ஆனால் புலி அமைப்பாளர்கள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்ட நாட்டியமயில் அல்லது இசைக்குயில் வருமானத்தினை பெற்று கடனை அடைப்பதாக பிரச்சாரப்படுத்தி கொண்டு தமது தனிப்பட்ட அனுதாபிகளிற்கு மட்டும் பணத்தினை திருப்பி கொடுத்தனர். சமமான முறையில் பாதிக்கப்பட்ட முறையில் பகிர்ந்தளிக்க படவில்லை.

இச்சம்பவங்களினால் அதிருப்தி அடைந்ததின் விளைவாகவே பெரம்பான்மையான உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்ற அவசியத்தின் வெளிப்பாடே பொது குழுவின் சந்திப்பு நடைபெற்றது.

சுயாதீனத்தினை விரும்புவோர்  29.09.2015 அன்று Tamil Welfare Association Solothurn. எனபதிவு செய்து கொண்டனர்.  புலத்து புலிகளின் ஆதரவோடு பதிவு செய்யப்பட்ட சங்கம் Tamilar (ரமிலர்) Nalanpuri Association Solothurn என 13.10.2015 அன்று பதிவு செய்துள்ளனர். சங்கத்தின் நோக்கமும் ஈ அடிச்சான் கொப்பி போல் அதே வசனத்துடன் எழுதப்பட்டுள்ளது.

இன்று தமது அமைப்புக்களை அரசியல் கட்சி சார்பற்ற சுயாதீன அமைப்பாக வைத்து கொள்ளவே  பெரும்பாண்மையானவர்கள் விரும்புகின்றனர்.

இனிமேலும் எவ்வித வேலைத்திட்டங்கள் அற்று செயற்படும் புலி அமைப்பினரை மக்கள் நிரகரிக்கவேண்டும். இவர்களின் முக்கிய நோக்கம் பணம் சேகரப்பது மட்டுமே. புலத்தில் உள்ள புலிகளினால் முடக்கப்பட்ட பெரும் தொகையான பணம் யுத்ததினால் வாழ்வாதரங்ஙகளை இழந்த மக்களிற்கும் மேலும் பாதிக்கப்பட்ட அல்லது அங்கவீனமுற்ற போரளிகளிற்கு உதவுவதற்கு போதுமானது. ஆனால் கசப்பான உண்மையாதெனில் எந்த ஓரு புலம் பெயர் நாட்டிலும் செயற்பட்ட புலிகளும் தம்மால் சேகித்த அல்லது முதலீட்டால் பெறப்பட்ட வருமானங்கள் சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களிற்கு கொடுக்கபடவில்லை மாறாக இப்பணங்கள் அந்தந்த நாடுகில் உறைந்த போனது.

ஆனால் மக்கள் விழிப்படைந்துவிட்டனர் அனைத்து நலன் விரும்பிகளும் புலத்து புலிகளின் இவ்வகையான சனநாயகவிரோதமான நடவடிக்கையை கண்டித்து அம்பலப்படுத்தல் வேண்டும். இரண்டு சங்க பதிவின் பத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.


அனைத்து சங்கங்களையும் அரசியல் தலையீடு அற்று சுயாதீனமாக செயற்பட வழிவகுக்க வேண்டும்.
31.10.2015

Dienstag, 27. Oktober 2015

அனுபூதி : மழைக்கால இரவு.

அனுபூதி : மழைக்கால இரவு.: சிறுகதை: மழைக்கால இரவு. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயி...

Sonntag, 25. Oktober 2015

மழைக்கால இரவு.

சிறுகதை: மழைக்கால இரவு.

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.
அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.
பெரும்பாலும் அன்றிரவு மீண்டும் எனது அணி போரின் முன்னணி களமுனைக்கு அனுப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்புடனிருந்தேன். எனக்கு தரப்பட்டிருந்த பதினைந்து பேர் கொண்ட அணியில் நேற்றிரவு நடந்தசண்டையில் காயமடைந்தவர்கள், மரணித்தவர்கள் போக ஆறு போ் தான் எஞ்சியிருந்தோம். வேறு அணிகளிலும் எஞ்சியவர்களை ஒன்று சேர்த்து அணிகள் மறு சீரமைக்கப்படும் வரை சிதைவுற்றிருந்த எம்மைப் போன்ற அணியினருக்கு சிறிய ஓய்வு தரப்பட்டிருந்தது.
அன்றிரவு நடந்த சண்டையில் காயமடைந்தவர்களை உடனடியாகவே பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ நிலைகளுக்கு அனுப்பியாகி விட்டது. மரணித்தவர்களின் உடல்கள் மட்டும் அது வரையிலும் அனுப்பப்படாமல் மழைத் தண்ணீரில் நனைந்து ஊறிப் பெருத்து உருமாறிக் கொண்டிருந்தது. அவைகள் பெற்றோர்கள் உரித்துடையோருக்கு ஒப்படைக்கப்படும்வரை மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது.
சங்கவி எனக்கருகில் படுத்திருந்தாள் அவள் எப்பவும் அப்படித்தான் நீட்டி நிமிர்ந்து மல்லாந்துதான் படுப்பாள். அப்படிப் படுக்கா விட்டால் நித்திரை வராது எனச் சொல்லுவாள். பொம்பிளைப் பிள்ளைகள் அப்பிடிப் படுக்கக் கூடாது என அவளின் அம்மம்மாவிடம் சின்ன வயதில் அடிக்கடி திட்டு வாங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறாள். ஆனாலும் அந்தப் பழக்கம் நானறிந்த வரையிலும் அவளுக்கு மாறவேயில்லை. தலை ஒரு பக்கமாக திரும்பியிருந்தது, வாயைக் கொஞ்சமாக திறந்து கொண்டு படுத்திருந்தாள். குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது.
ஆறெழு மாதங்களுக்குப்பின் அன்றுதான் அப்பிடி நிறைய நேரம் சங்கவி படுத்திருந்தாள். நேற்றுக் கூட சொல்லிக் கொண்டிருந்தாள், ’இந்த சண்டை முடியவிட்டு முதலில நிம்மதியா நித்திரை கொள்ளவேணும்.’ உண்மைதான், அந்த யுத்தத்தின் தயார்ப்படுத்தலுக்காக, சுமார் ஒரு வருட காலமாகவே தொடர் பயிற்சிகளும் துாக்கமில்லா இரவுகளும்தான் எங்களுக்கு வாய்த்திருந்தது.
போர் தொடங்குவதற்கு முதல்நாள் முன்னிரவுப் பொழுதில் மழை சற்று ஓய்ந்திருந்தது. கருமையான வானத் திரையில் பதிக்கப்பட்ட வைரக்கற்களாக நட்சத்திரங்களின் ஜோலிப்பு மனதைக் கொள்ளையடிப்பதாயிருந்தது. ஐயாயிரம் போராளிகள் பங்கு பற்றும் பெரும் போர் நடவடிக்கையின் கடைசி ஆயத்தங்கள் முடிந்து புறப்படுவதற்கான இறுதி தரிப்பிடங்களில் படையணிகள் நிலை கொண்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் அந்த இராணுவ முகாமின் பாரிய தேடோளி விளக்குகள் ஆங்குமிங்குமாக சுழன்று சுழன்று இரவைப்பகலாக்கி தமது விழிப்பு நிலையை காண்பித்துக் கொண்டிருந்தன.
சிறிய மா மரமொன்றின் அடியில் சாய்ந்திருந்த என்னருகில் சங்கவியும் ஓய்வாக அமர்ந்திருந்தாள். மந்தகாசமான புன்னகையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விரிந்த உதடுகளும், கனவு காணுமாப் போல பாதி செருகிக்கிடந்த கண்களும், அவளிதயம் விபரிக்க முடியாத உணர்வுகளுக்குள் லயித்திருப்பதை எனக்கு உணர்த்தியது. “என்னடி முழிச்சுக்கொண்டே நித்திரை அடிக்கிறியோ” எனது சீண்டல் அவளைக் குழப்பியதாக தெரியவில்லை. என்னிதயத்திலும் பொங்கியெழும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தாலும், அவளது அந்த இனிய மோன நிலையை குழப்பவும் மனமில்லாதிருந்தது..
ஒரு போர்ப் பயணத்திற்குரிய பரபரப்பான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் ஒரு சில மணித்தியாலயங்களில் புறப்படுவதற்கான பதட்டம் அனைவரின் முகங்களையும் கனமாக மூடியிருந்தது.
பலர் தாழ்ந்த குரல்களில் தம் தோழியருடன் கதைத்துக் கொண்டிருந்தனர். சிலர் பாதி நிலவு தெளித்திருந்த ஒளியில் தம் உறவுகளுக்கு இறுதியாக சொல்ல நினைக்கும் செய்திகளை கடிதங்களாக வரைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் எல்லா சலனங்களையும் ஒத்தி வைத்து விட்டவர்கள் போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.
தன் மௌனம் கலைந்த சங்கவி எனது கையுடன் தனது விரல்களைக் கோர்த்துப் பிணைந்து கொண்டாள். எதையோ பேசுவதற்குத் தயாராகிறாள் என்பது புரிந்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்தில நிலைமை எப்படி மாறப்போகுது. அழகான இந்த இரவின்ர அமைதியே குலையப் போகுது, எத்தனை அம்மாக்களின்ர பத்து மாதக் கனவுகள் கலையப் போகுது நாளைக்கு எங்கட சனங்கள் விழுந்தடிச்சுக் கொண்டு பேப்பர் எடுப்பினம்”
எனக் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகிப் போனாள். நாங்களிருவரும் சம வயதுடையவர்கள். எமக்கு விபரம் புரியத் தொடங்கிய சிறு வயதிலிருந்தே தொண்டையை நெருக்கிக் கொண்டிருக்கின்ற யுத்தத்தின் பாடுகளுக் கூடாகவே வளர்ந்திருந்தோம். நான் வன்னியின் ஒரு கிராமத்திலும் அவள் யாழ்ப்பாணம் வடமராட்சியின் ஊரொன்றிலும் பிறந்திருந்தாலும், அமைதியான ஒரு வாழ்வு எப்படியிருக்கும் என கற்பனை பண்ணிக் கூட பாரக்கவே முடியாதளவுக்கு மலைப்பாம்பு மாதிரி எமது வாழ்வை வளைத்து இறுக்கிக் கொண்டிருந்தது நீண்டு கொண்டேயிருந்த யுத்தம்.
விறைப்பெடுக்கச் செய்த குளிரையும் மீறி பெரு மூச்சொன்று அவளிடமிருந்து சூடாக வெளியேறியது. எனக்கோ என்றால் நெஞ்சுக்குள்ளாக பாராங்கல்லொன்று அடைத்துக்கொண்டு இருப்பதைப் போல சாதாரணமாக மூச்செடுத்து விடவும் கூட கடினமாக இருந்தது. அவள் சொல்லுவதை மட்டுமே நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்ற கனவு உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும்போதே ஊரில் நிலவிய யுத்த சூழ்நிலையில் எம்மைப் போன்ற பலருக்கும் கூட கலைந்து போயிருந்தது. ஏதாவது புதுமைசெய்யத்துடிக்கும் அந்த பதின்மப் பருவத்தில் போரிடுதல் ஒன்றுதான் எமது கனவுகளை நனவாக்கும் எனக் கருதினோம். யாழ் நகரத்தில் உள்ள பிரபல கல்லுாரியின் மாணவியான சங்கவியும் வன்னிக் கிராமத்து பள்ளியொன்றின் மாணவியான நானும் போர்ப் பயிற்சிப் பாசறையின் நண்பிகளானோம்.
எம் நினைவுகளை கலைத்தவாறு சட்டென மரக்கிளைகள் அலைப்புற இரவுப் பறவையொன்று வேகமாக எழும்பிப் பறந்து சென்றது. பொல பொலவெனச் சிதறிய தண்ணீர் துளிகள் இருவரின் தலைகளையும் நனைத்துச் சிதறியது. தண்ணீரைக் கைகளால் வழித்து எறிந்துகொண்டு உடைகளையும் இலேசாக உதறிக்கொண்டோம். தடிப்பான சீருடையையும் தாண்டி தேகம் சிலிர்த்தது
“இந்த சண்டை முடிய எல்லாருக்கும் லீவு கிடைக்கும் என பொறுப்பாளர் சொன்னவா, நான் உன்னோட வரட்டுமா? எனக்கு வன்னியில ஊருகளைப் பாக்கிற தெண்டால் சரியான விருப்பமடி. பச்சையான வயலுகளும் நெளிஞ்சு நெளிஞ்சு ஓடுகிற வாய்க்கால்களும், பென்னாம் பெரிய யானை நிக்கிற காடுகளும் அப்பப்பா என்ன இயற்கையப்பா..”
“அதுக்கென்னடியப்பா வா போவம் நான் பள்ளிக்கூடம் கொண்டு போன சைக்கிள் இப்பவும் இருக்குமெண்டு என நினைக்கிறன், இரண்டு பேரும் சுத்தித் திரியலாம், நான் படிச்ச பள்ளிக் கூடத்தைக் காட்டுறன், நானும் கூட்டாளிப் பிள்ளைகளும் தாவணி உடுத்துக் கொண்டு ஆனி உத்தரத் திருவிழா பார்க்கப் போன முருகன் கோயிலைக் காட்டுறன், அங்க போகிற பெட்டையள் கூட்டத்தைக் கண்டாலே நாதஸ்வரக்காரன் ’ராசாத்தி மனசில’ பாட்டுத்தான் வாசிப்பான் தெரியுமாடி நாங்கள் அவரை கோவத்தோட நல்லா முறைச்சுப் பாத்திட்டு வருவம்”
எனது கதையைக் கேட்டதும் பக்கென வெடித்த சிரிப்பை அடக்குவதற்காக தனது வாயை கைகளால் இறுக்கி பொத்திக்கொண்டாள் சங்கவி. மிக அருகான இராணுவதளத்திலிருந்து ஆட்லெறி எறிகணையொன்று ’கும்’ என்ற அதிர்வுடன் எழும்பி கூவிக் கொண்டு புறப்பட்ட சிலநொடிகளிலேயே தூரத்தில் வெடித்துச்சிதறும் சத்தம் கேட்டது. எத்தனை தொட்டில் குழந்தைகளின் உறக்கம் கலைந்து போனதோ என எண்ணிக் கொண்டேன்.
தலையை உலுக்கி நினைவுகளை உதற முனைந்தேன்.. அசையாமல் படுத்திருக்கும் சங்கவியின் கிராப்புத் தலை முடியினை கோதி விட வேண்டும் போலிருந்தது. இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களில் எல்லாமே புதியதான காலகட்டம், இறுக்கமான நாளாந்த அட்டவணையின்படி செயற்படவேண்டும். பயிற்சி முகாமில் மிகவும் துடிப்பான, கலகலப்பான போ்வழிகளான நாம் அனைவராலும் விரும்பப்பட்டவர்களாக இருந்தோம். பெரும்பாலும் ஒத்துப்போகும் இயல்புகள், ரசனைகள், வேறுபட்ட சிந்தனைபோக்கு இவைகளினால் இணைபிரியாத எமது நட்பு பொறுப்பாளர் மட்டங்களிலும் பிரசித்தமானதாகவே இருந்தது.
ஓய்வு நேங்களில் புத்தகவாசிப்பு, ஒன்று சேரும் நேரங்களில் நீளும் உரையாடல்கள், அப்பப்பா எப்பவுமே முடிவடையாதது எங்களின் சம்பாசணைகள் அவளது மூளையின் மடிப்புகளில்தான் எத்தனை கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் வைத்திருந்தாள். சராசரியான விடயங்களை பேசிக் கொள்ளும் தோழிகளோடு எங்களிருவருக்கும் எப்போதுமே ஒத்துப்போவது குறைவு. எமது உரையாடல்களில் பங்கு பற்றும் தோழிகள் சற்று நேரத்தில் ’இதுகள் சரியான கழண்ட கேசுகள்’ எனும் விதமான பார்வையை வீசி விட்டு மெதுவாக இடத்தைக்காலி செய்து விடுவார்கள்.
அந்த யுத்த நடவடிக்கை சரியாக நள்ளிரவு ஒன்றறை மணிக்கு ஆரம்பிக்கப் படவிருந்தது. மிகவும் இரகசியமான சங்கேத சமிக்கைகளுடன் எமது ’முன்னரங்க தடை உடைக்கும்’ அணியும் முன்னணியில் நகர்ந்து கொண்டிருந்தது. ’உச்ச பாதுகாப்புடன் இருந்ததான அந்த இராணுவ முகாமின் முன்னணிப் பாதுகாப்பு வேலியில் காணப்படும், முள்ளுக்கம்பி சுருள்களையும், நிலக் கண்ணிகளையும், சூழ்ச்சிப் பொறிகளையும் தகர்க்கக் கூடிய டோபிடோ குண்டுகளை வெடிக்க வைத்து பாதையொன்றை ஏற்படுத்திக் கொண்டு, இராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியவாறு, உயரமான மண்அரணை வேகமாக கடந்து உள்ளுக்கு இறங்க வேண்டும்.
பின்னுக்கு வரும் தாக்குதல் அணிகள் அந்தப் பாதைக்கூடாகவே முன்னேறிச் சென்று இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பிரதான மையங்கள் மீது தாக்குதலை மேற் கொள்ளுவார்கள்’ இதுதான் எனது அணிக்கு தரப்பட்டிருந்த தாக்குதல் திட்டம். இதற்கான கடின பயிற்சிகளையும் சண்டைக்கான ஒத்திகையினையும் மேற் கொண்டிருந்தோம். இராணுவ தளத்தினை சுற்றி வளைத்து பல முனைகளிலும் அணிகள் இவ்வாறாக பாதைகளை உடைக்க வேண்டியிருந்தது. அந்தப் பாதைகளுக் கூடாக இராணுவ முகாமுக்குள் பெரியளவில் படையணிகள் உள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் திட்டமாக இருந்தது. இராணுவ முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும், பெறுமதியான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும் எனவும், இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக சுமார் ஐயாயிரம் போராளிகள் வரை யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கூறப்பட்டிருந்தது. இறுதி ஒத்திகைப் பயிற்சி முடிந்து, வரைபடத்தில் விளக்கம் தரப்பட்டு, முழுமையான ஆயுதபாணிகளாக படையணிகள் தயார்ப்படுத்தப்பட்டு, “சென்று வாருங்கள் வென்று வாருங்கள்” என வாழ்த்துக் கூறி வழி அனுப்பப் பட்டிருந்தோம். போர்க்களத்தின் சூனியப் பிரதேசத்தை அண்மித்த பகுதிவரை தாக்குதல் அணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு பின்னால் பல லொறிகளில் ஆயிரக்கணக்கான சவப்பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு கூடவே கொண்டு வரப்பட்டிருந்தன.
தாக்குதல் தொடங்கிய சற்று நேரத்திலேயே எமது அணி உள்நுழைந்து விட்டிருந்தாலும், மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை கடந்து முன்னேறிச் செல்லும் முயற்சியிலே அந்த இடத்திலேயே பலர் உயிரிழக்க நேர்ந்தது. இராணுவத்தினர் கனரக ஆயதங்களின் உதவியுடன் பலமான எதிர் தாக்குதலை மேற் கொள்ளத் தொடங்கியிருந்தனர். மிகுந்த பிரயத்தனத்துடன் எனது அணி தனது பணியை முடித்திருந்த போது ஆரம்ப நகர்விலே எம்முடனிருந்த பல தோழிகள் உயிரிழந்தும், இன்னும் சிலர் படு மோசமான காயங்களையும் அடைந்திருந்தனர். எஞ்சியிருந்தவர்கள் பயங்கரமாகக் களைப்படைந்திருந்தோம்.
அந்த இராணுவ தளம் வயல் வெளி சூழ்ந்த பிரதேசமாகையால், ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளிலிருந்து வந்த எதிர்த்தாக்குதல்களால் எமது தரப்பு அணிகள் வயல் வெளியைக் கடக்கும் முயற்சியிலேயே அடிவாங்க வேண்டியிருந்தது. தொடர்ந்து பலர் உயிரிழந்தும், காயமடைந்தும், கொண்டிருந்தனர். உயரமான காவலரணிலிருந்து மேற் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சினைப்பர் தாக்குதல்(குறிபார்த்துச் சுடுதல்) மிகுந்த நெருக்கடியை தந்தது. வரம்புக்கு மேலாக தலையை உயர்த்தினால் கட்டாயம் வெடி விடும் என்ற நிலைமையிலும், இராணுவ காவலரண்களை நோக்கி தாக்குல் நடத்தியவாறு எழும்பி ஓடிச் சென்றவர்கள் தலையிலும், மார்பிலும் சூடுகளை வாங்கியபடி சேற்றுத் தண்ணீர் தளம்பிக் கொண்டிருந்த வயல்களுக்குள் சரிந்து விழுந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியாமலிருந்தது.
அப்படியிருந்தும் பல அணிகள் உள்நுழைந்து மிக நெருக்கமான நிலையில் நின்று போரிட்டனர். அருகருகாகவே இறந்தும் விழுந்தனர். சிக்கலான முள்ளுக் கம்பிச் சுருளுக்குள் ஒரு ஆண் போராளி காயத்துடன் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருந்தான், அவனை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஓடிச் சென்ற பெண் போராளி ஒருத்தி அந்த இடத்திலேயே சூடுபட்டு விழுந்தாள். பல மணி நேரமாக அந்த இடத்தை எவராலும் நெருங்கவே முடியாமலிருந்தது. அதிகமான இரத்தம் வெளியேறியதால் சற்று நேரத்தில் அவனது சடலம் அக்கம்பிச் சுருளுக்குள் அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
எனது அணி மிகவும் நலிவடைந்திருந்தது. காயமடைந்தவர்களுக்கான அவசர முதழுதவிகளை வழங்கி அவர்களை ’காவும் குழுவினர்’ பின்னணி மருத்துவ நிலைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும் தூக்கிக் கொண்டு பின்வாங்கும்படி எனது அணிக்கு கட்டளை கிடைத்தபோது பொழுது புலரத் தொடங்கியிருந்தது.
அன்று நண்பகல்வரையிலும் உக்கிரமாக நீடித்த சண்டை சற்று தணிவான நிலைமைக்கு சென்றிருந்தது. அப்போது களமுனையில் ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியிருந்தது. ஓய்வில்லாதபடி குண்டுகளைச் சொறிந்து கொண்டிருந்த வானூர்திகளும் ஓய்வெடுக்கின்றன போல என நினைத்துக் கொண்டேன்.
எமது அணி ஓய்வுக்காக நிலை கொண்டிருந்த பூவரசு வேலிக் கரையினை அண்டிய சிறிய மண் பாதைக் கூடாக, முன்னணி நிலைகளில் நின்று போரிட்டு எம்மைப் போல பலமாக சிதைவுற்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எனக்கு அறிமுகமான பலரது முகங்கள் காணாமல் போயிருந்தது. அவர்கள் காயமடைந்தோ அல்லது மரணித்தோ போய்விட்டார்கள் என மனம் சொல்லிக் கொண்டது. அதேவேளை பல புதிய அணிகள் ஓட்டமும் நடையுமாக முன்னணிக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தன. கைகளிலும், கால்களிலும் உடலின் பல பாகங்களிலும் பாரிய காயங்களுடன் அலறிக் கொண்டிருந்த காயக்காரர்களையும், உயிரிழந்து கிடந்த சடலங்களையும் கடந்தவாறு முன்னணிக்கு களமுனைக்கு சென்று கொண்டிருந்தவர்களின் முகத்தில் எந்தச் சுரத்துமே இல்லாதிருந்தது.
அன்றிரவு களமுனையில் நான் கண்டு கடந்து வந்த காட்சிகள் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நின்று சுழன்று கொண்டிருந்தன. சினிமாவில்கூட இரத்தக்காட்சிகள் வரும்போது கண்களை மூடிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்தான் எனது அதிகமான தோழிகள். காலம் எம்மீது திணித்துவிட்டிருந்த அந்த போராட்ட வாழ்க்கையின் . சில தருணங்களில் நாம் கண்னால் காணும் காட்சிகள் மனதை மிகவும் பேதலிக்கச் செய்பவையாக இருந்தாலும் கட்டளைக்கு கீழ்பணியும் இராணுவ மரபு செயலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் இயந்திரம் போலாக்கிவிடும்.
அன்றையபோரில் ஈடுபட்டுக் மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது.
ஓயாமல் பெய்த வண்ணமேயிருந்த மழை அங்கு சிந்திக் கொண்டிருந்த இரத்தத்தை கரைத்துக் கொண்டு சிவப்பு வெள்ளமாக வயல்களிலும், வாய்க் கால்களிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது . அந்தக் குருதிச் சகதியில் கால்கள் புதையப் புதைய நடந்த போது, இனம்புரியாத ஏதோவொரு இயங்குவிசை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போவதைப் போல உணர்ந்தேன்.
அடுத்த கட்டளை எந்த நேரத்திலும் எனது அணிக்கு பிறப்பிக்கப்படலாம் என்பதை ஊகிக்க முடிந்தது, உடனடியாக முன்னேறிச் செல்வதற்குரிய தயார் நிலையில் இருந்து கொள்ளும்படி எனது அணியைச் சேர்ந்த தோழிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தேன். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாயிருந்த, அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களிலும் களைப்பு அப்பிப் போயிருந்தது. நின்று நிதானித்துக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை, தமக்காக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த உலர் உணவுகளை உண்டு பசியாறிக்கொண்டும், தமது துப்பாக்கிகளை சுத்தப்படுத்திக் கொண்டுமிருந்தனர். அவர்களிடையே வழக்கமான எந்த சல சலப்புக்களும் இருக்கவில்லை, ஒரு இறுக்கமான மனநிலையுடன், கட்டளைகளை செயற்படுத்துவதில் மட்டுமே அவர்களுடைய புலன்களை குவித்திருந்தார்கள், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த சண்டை முடிவுக்கு வரும் போது, உயிரோடு திரும்பும் சந்தர்ப்பம் சிலருக்காவது கிடைக்கலாம். ஆனாலும் எல்லா முகங்களிலுமே அப்படியொரு நிச்சயம் முற்றாக துடைக்கப்பட்டிருந்தது.
திடீரென உலங்கு வானூர்திகள் சில மும்முரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டே வட்டமடிக்கத் தொடங்கின. வேறு சில உலங்கு வானூர்திகள். தரையிறங்குவதும் மேலெழும்புவதுமாக இருந்தன. இராணுவத்தினரும் தமது அணிகளை தயார்படுத்துகிறார்கள் எனப்புரிந்தது. அவர்களில் காயப்பட்டிருந்தவர்களையும், உயிரிழந்துவிட்டவர்களின் உடல்களையும் அந்த வானுார்திகளில் ஏற்றிச் செல்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களில் எஞ்சியிருப்பவர்களும் பிரிந்து போன தமது நண்பர்களுக்காக மனம் வருந்திக் கொண்டு, அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.
எனது பார்வை உறங்கிக்கிடக்கும் சங்கவி மீது படிந்தது. சாதாரண நாட்களில் தலையிடி காய்ச்சல் எனக்கூட படுத்தறியாத சங்கவி, பயிற்சிக் காலங்களில் நின்று கொண்டே நித்திரை கொள்ளுவாள். குப்புறப்படுத்து நிலையெடுத்தால் பாதியுடம்பு மூழ்கும்படியானபடியான சேற்று வயலில் மணிக்கணக்காக நீளும் இரவுப் பயிற்சிகளின் போது மெல்லிய குறட்டையுடன் அவள் உறங்கி விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் இப்போது அவளைப்பார்க்க பொறாமையாக இருந்தது. எப்படியொரு நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றிருக்கிறாள். எனக்கும் கூட உடனடியாகவே அவளைப்போல உறங்கிவிட வேண்டும் போலிருந்தது.
வானூர்தியிலிருந்து படையினருக்கு வீசப்பட்டிருந்த உணவுப் பொதிகள் எமது பக்கத்திற்கும் தாராளமாகவே வந்து விழுந்திருந்தன. பேரீச்சம்பழ பக்கற்றுக்கள், டின்களில் அடைக்கப்பட்ட சமைத்த உணவு வகைகள், சீஸ்கட்டிகள், இப்படி நிறைய, ஆனால் எனக்கோ பசி, தாகம் என்பதை உணர முடியாமலிருந்தது. எனது வயிறு ஒட்டிப் போய் இறுகிக் கிடந்தது. ஒருமிடறு தண்ணீர் கூட உள்ளிறங்குமா எனத் தெரியாதிருந்தது.
முதல்நாள் மத்தியானம் விசேட உணவாக தரப்பட்டிருந்த புரியாணிப்பார்சலில், மிகவும் சுவையாக சமைக்கப்பட்டிருந்த கோழியின் கால் எலும்பை கடித்து சுவைத்துச் கொண்டிருந்த சங்கவியின் தோற்றம் கண்ணுக்குள் வந்து நின்றது, அவள் நல்ல சாப்பாட்டுப்பிரியை, எஸ். பொ வின் “நனைவிடை தோய்தல்“ புத்தகத்தை வாசித்து வாசித்தே நாக்கைச்சப்புக் கொட்டுவாள்.
“இந்தச்சண்டை முடிந்தவுடனே வீட்டுக்கு போய் முதல் வேலையாக அம்மாட்டச் சொல்லி குழல்புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும், நிறைய வெங்காயம் போட்ட முட்டைப் பொறியலும் செய்து சாப்பிடவேணுமடி” என்பாள். சாதாரணமாக பசியிருக்கவே மாட்டாள், கொஞ்சமாக வயிறு கடிக்க ஆரம்பித்ததும் எல்லா வேலைகளையும் மறந்து எங்கயாவது கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா, என தேடத் தொடங்கி விடுவாள். நள்ளிரவு நேரமானால் கூட காவல்கடைமை முடித்த கையுடன் ஏதாவது கொறித்து விட்டுத்தான் நித்திரைக்குப் போவாள். இப்போது பசியே இல்லாத மாதிரி படுத்துக் கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சங்கவியின் ஜீன்ஸ் பொக்கட் ஒன்று புடைத்துக் கொண்டு இருப்பதைக்காணமுடிந்தது. கையை உள்நுழைத்துப் பார்த்தேன். “ஓ…. முதல் நாளிரவு கடைசியாக அனைவருக்கும் பகிரப்பட்ட அப்பிள் பழம். இதையேன் சாப்பிடாமல் வைத்திருந்திருந்தாள் என்ற கேள்வி மனதிற்குள் ஓடியது. எத்தனை நாட்கள் ஒரு கப் தேனீரை மாறி மாறி குடித்திருக்கிறோம், ஒரு கோப்பையில மட்டுமே சோறு கிடைக்கும் சந்தர்ப்பங்களில், “அள்ளிச்சாப்பிடு அள்ளிச்சாப்பிடு” என வாஞ்சையுடன் எனக்கென ஒதுக்கி விட்டுக் கொண்டு தான் உண்பது போன்ற பாவனையில் இருந்திருக்கிறாள். நட்புடன் பகிர்ந்து ருசிக்கும் பிஞ்சு மாங்காயின் சுவை கூட, எவ்வளவு அலாதியானது. காதைச்சுற்றி ரீங்காரமிடும் துரத்த முடியாத வண்டுகளைப்போல நினைவுகள் சுழலுகின்றன.
எனது கைகள் அவளின் நெற்றியை வருடின. முதல்நாள் மாலை திடீரென தனது குறிப்பு புத்தகத்தை என்னிடம் நீட்டியிருந்தாள் “இதை உன்ர பாக்கில வை இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டாள்.. “திரும்பிப் போகக் கிடைத்தால் நிறையக் கதைகள் எழுத வேணும்” கொள்ளை கொள்ளையான கதைகளை மூடி வைத்திருக்கும் பெட்டகம் மாதிரித்தான் அவளுடைய மனதும் இருந்தது,
சங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபட வென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம்.
அன்றிரவு எமது அணிகள் முன்னேறிச் சென்று போரிட்டுக் கொண்டிருந்த போது, சங்கவியும் தனது அணியுடன் போரில் ஈடுபட்டிருந்தாள். அப்பொழுது சரமாரியாக அவளது அணியை நோக்கி தீர்க்கப்பட்ட வேட்டுக்களில் ஒரே ஒரு ரவை அவளது இதயப்பகுதியை ஊடுருவிச் சென்றிருந்தது. உடனே சற்று தலையை உயர்த்தியவளிடமிருந்து ’ஹக்’ என்ற விக்கல் போன்ற ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்தகணம் வாயிலிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்த வெளியேறியது. எந்த துடிப்போ, துள்ளலோ இல்லாமல் மௌனமாக தலை சரியத் தொடங்கிய சங்கவியின் முகம் சேற்று வயலில் பொத்தெனப் புதைந்து போய் விட்டது .
அவளது உடலையும் தோளிலே சுமந்து கொண்டுதான் பின்வாங்கியிருந்தோம். வெகு நேரத்தின் பின்பு அதையும் அனுப்பியாயிற்று. பளிச்சென்ற குங்குமம் தீட்டிய அவளது தாயின் வதனமும், கனிவான புன்னகை படர்ந்திருக்கும் அவளின் தந்தையின் முகமும் எனது கண்களுக்குள் வந்து நின்றது. அடி வயிற்றிலிருந்து கிளம்பிய திரணையொன்று நெஞ்சுக்குள்ளேயே சிக்கிக் கொண்டதால் பிளந்து விடுவது போன்ற வலியில் மூச்சு திணறியது எனக்கு. தீக்கங்குகள் போல சிவந்துபோயிருந்த கண்களின் எரிவு தாங்கமுடியாதிருந்தது. அந்த உழவு இயந்திரத்தின் சத்தம் தூரத்தில் தேய்ந்து மறைந்து போனது. எனக்கோ அசையவும் முடியாமலிருந்தது.
“உங்கட ரீமை வேகமாக நகர்த்திக் கொண்டு ஆழமரத்தடி சந்திக்கு வாங்கோ”. வோக்கி டோக்கி இரைச்சலுடன் எனது அணிக்கான கட்டளையை அறிவித்திருந்தது, மீண்டும் போர்க்கள முன்னணிக்கு நகர்வதற்கானக்கான வேகமான தயார்ப்படுத்தலுக்காக அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன, கரு மேகங்கள் சூழ்ந்த வானம் இருள்மூடிக் கிடந்தது. நசநச வென்று வெறுக்கும்படியாக மழை பெய்து கொண்டேயிருந்தது, இடை வெளியில்லாமல் காது கிழியும்படி பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன. நிணமும் குருதியும் கடைவாயில் வழிய வழிய பசியடங்காத பூதம்போல மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம்.
(1993-11-11) பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டது)
நன்றி பதிவுகள்

Freitag, 2. Oktober 2015

இலக்கு / Sucess


_________________________________________________________________


அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது. இத் தீர்மானம் இலங்கையின் இராஐதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியா? அல்லது நீதிகோரும் தமிழர்களிற்கு கிடைத்த ஏமாற்றமா? தமிழர்களிடையும் சிங்களவர்களிடையேயும் பரவலாக விவாதிக்கும் செய்தியாக உள்ளது. இத்தீர்மானம் பற்றியோ அல்லது அரசபயங்கரவாதத்திற்கான விசாரனை பற்றியோ அல்லது சர்வதேச நீதி விசாரனை போன்ற விடயங்களை விவாதிப்பதற்கு முன்னர் தமிழராகிய நாம் எமது அபிலாசைகள் எதிர்பார்ப்புகள் அரசியல் தீர்வுபோன்ற பல் வேறுவிடயங்களை பற்றி நாம் எம்மை நாம் புடம்போட்டுக்கொள்ளல் வேண்டும். அவ்வகையில் சில பல கேள்விகளையும் யாதார்த்த நிலைமையை கவனத்தில் கொண்டு எனது பார்வையை இங்கு பதிவிடுகின்றேன்.

இறுதி யுத்ததில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை ஏன் அவசியம்?
  1. குற்றத்தினை இழைத்த உரிய அரசியல்வாதிகளிற்கும் இராணுவவீரர்களிற்கும் தண்டனை வாங்கி கொடுப்பது.
  2. இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை நிருபித்து சர்வதேசத்திடம் இருந்து அரசியல் தீர்வுபொதியை பெற்றுகொள்வதை சாத்தியமாக்குவது.
  3. இலங்கை அரசின் குற்றங்களை நிருபித்து பாதிக்கப்பட்டவர்களிற்கான உரிய வாழ்வாதாரங்களை நட்ஈடாக பெற்றுகொடுப்பது.
  4. இவ்விடயத்தினை ஓவ்வொரு வருடமும் பேசி அதிதீவிர தமிழ்தேசியத்தினை பேசி மீண்டும் ஓர் கடும்போக்கு அரசியலை அல்லது போராட்டத்தினை சாத்தியப்படுத்துவது.
இவ்வாறு பல்வேறு நிலைப்பாடுகளை பலதரப்புக்கள் பதிலாக வைத்திருக்கின்றனர். இது எவ்வாறு சார்த்தியம் என்பதனை ஆராயும் முன்னர் இன்னொரு கேள்வியினை தொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
யாரிடம் நாம் இந்நியாயத்தினை அல்லது நீதியை கோருகின்றோம்?
பதில் சர்வதேசம் என்பதே பலரின் பதிலாக அமையும். இதற்கு நாம் அடுத்த கேள்வியை தொடுக்கவேண்டும். இச் சர்வதேசம் யார்? இவர்களில் பலர் இலங்கை அரசுடன் ஒன்றிணைந்து இறுதியுத்ததினை நடாத்தியவர்கள். எவ்வாறு நாம் அநீதி இழைத்தவர்களிடையே நீதி கேட்பது என்ற கேள்வி எழுகின்றதல்லவா. அப்படியாயின் பதில் சர்வதேச காய்நகர்த்தலில் யுத்தின் பங்காளிகளின் இலங்கை சார்பு நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்நிலைமையை தமிழர்தரப்பு சாதகமாக பயன்படத்தி கொள்ளலாம் என்பதனையும் இரஐதந்திரரீதியான வாதமாக கொள்ளலாம். அவ்வாறாயின் சார்பு நிலைகள் மாறுவதற்கு காரணமாக காரணிகள் எவை என்ற கேள்வி எழுகின்றது. அதற்கான பதில்களாக யுத்தம் நடைபெறும்போது இலங்கை அரசு இந்திய சீன ஆதரவாளனாக இருந்தது. அன்றைய 9/11 சம்பவம் பயங்கரவாத ஓழிப்பு என்ற போர்வையில் உலகத்தில் அனைத்து போரட்டங்களை ஓடுக்கும் பெரும்பாண்மை கருத்தியலை அமெரிக்கா உருவாக்கியிருந்துது. இதனாலே இலங்கை அரசும் புலிகளினால் அனுப்பபட்ட விமானத்தினை கொழும்பு வரை அனுமதித்து இலங்கையும் இந்தியாவும் வேடிக்கை பார்த்து பயங்கரவாத ஓழிப்பு என்பதற்கு வலுவான சந்தர்பங்களை உருவாக்கினர். அதுமட்டுமல்லது புலிகளின் ஏனைய செயற்பாடுகளும் இதற்கு வலுவூட்டியது.

ஏன் யுத்ததின் பின்னர் இறுதியுத்ததினை நடாத்திமுடிந்தபங்காளிகள் வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தனர்? அனைவரும் அரசுகளிற்கு எதிரான போரட்டங்களை ஓடுக்குவதற்காக கைகொடுத்தனர். அத்துடன் தெற்காசியபிராந்தியத்தில் புலிகளை வைத்து தமது நலனை சாதிக்கும் நிலமை அற்றிருந்ததும் ஓர் காரணமாக அமைந்திருந்தது. அவ்வாறு ஓர் தேவை அன்று இருந்திருப்பின் புலிகளை ஓழிக்கும் நடவடிக்கை நடைபெற்றிருக்காது. இந்தியா புலிகளின் கடந்தகால செயற்பாடுளினால் புலிகளை அழிக்க கங்கணம் கட்டியிருந்த நிலமையும் அன்று முதன்மையாக காணப்பட்டது. யுத்ததின் பின்னர் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் முக்கிய நோக்கம் இலங்கையை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து அகற்றி தமது தலையீட்டினையும் ஆதிக்கத்தினை நீலைநாட்டுவது.

இந்நிலைப்பாட்டின் மாற்றத்தினாலே மகிந்த சாம்ராஐயம் ஓரம்கட்டப்பட்டு வேறு அரசு உருவாக்கப்பட்டது. இன்று இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கு ஆதரவான இலங்கை அரசின்மீது கடும் நெருக்கடிகளை கொடுக்க விரும்பாததினால் அமெரிக்கவினால் கொண்டுவரப்பட்ட சிறுது இறுக்கமான கலப்புநீதிமன்ற முறையினை கொண்டுவந்து பின்னர் இலங்கை அரசின் விருப்பத்திற்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகள் இணைந்த விசாரணை என்றுமாற்றி அமைக்கபட்டது. மற்றும் பல சொற்பதங்கள் மென்மையாக்கபட்டது. அதுமட்டுமன்றி புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களும் விசாரிக்கபடவேண்டும் என்ற விடயங்களும் உள்ளடக்கபட்டன.

போர்குற்ற விசாரனை என்றால் இருதரப்பு தவறுகளும் கண்டறியப்படவேண்டும் என்பது ஓர் பொதுவான நியதியாக இருந்தாலும் அன்றைய யுத்ததில் ஈடுபட்ட பல முக்கிய அல்லது பொறுப்பெடுக்கவேண்டிய புலிகள் பலர் உயிருடன் இல்லை. இது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி எழுகின்றது.

இக்குறைந்தபட்ச விசாரணை பொறிமுறை நன்மைபயக்குமா? இது ஓர் கண்துடைப்பா? இவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதா? அல்லது முடிந்தவரையில் நடைமுறைப்படுத்துவதா? அல்லது தனியே இலங்கை அரசிற்கு எதிரான கடும் எதிர்ப்பரசியலை நடாத்துவதா? போன்ற கேள்விகள் எம்மிடத்தில் ஏற்படுவது நியாமனது. ஆனால் எவ்வகையான வழிமுறை இராஐதந்திரமானது என்ற முக்கியமான கேள்விக்கு பதில்காண்பதே எம் முன்னே இன்று முன்னெழுந்திருக்கும் சவாலாக உள்ளது.

யுத்தகுற்றங்கள் கலப்புமுறை நீதமன்ற முறையிலான விசாரணைகளின் முடிவு ஆனாலும் பொதுநலவாய நாடுகளின் தலையீடுகளினூடாக பெறப்படும் விசாரணையின் முடிவானாலும் வெளிவரும் காலப்பகுதியில் நிலவும் அரசியல் சமூக நிலைமைகளே அம்முடிவின் போக்கினை தீர்மாணிக்கபோகின்றது.

சுவிற்சர்லாந்து அரசியலில் இடம்பெறும் சர்வஐன வாக்கெடுப்புகளில் அவ்விடயத்திற்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் கடும்பிரச்சாரத்தினை செய்தபோதும் ஓர் தரப்பு வெற்றிபெறுகின்றது. அன்றைய அரசியல் சர்வதேச நிலைமைகளின் போக்கும் இம் முடிவுகளில் கட்டாயமான தாக்கத்தினை செலுத்தியிருக்கும். தோல்வியுற்றவர்கள் அக்கருத்தினை அடுத்த கருத்துகணப்பு வரைக்கும் தொடர்ச்சியாக வேலை செய்வார்கள் சில வேளைகளில் அடுத்தகணிப்பில் வெற்றிபெறும்வாய்பு பெறுகின்றது.


எமது அரசியல் பாரம்பரியத்தில் முன்வைக்கும் கோரிக்கைகள் உடன் சார்த்தியப்பட வேண்டும் அல்லது நிராகரிப்பு. இந்த மனோநிலை மாற்றமடையவேண்டும் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை பெற்று உயர்ந்த இலக்கை அடையதொடர்ச்சியான செயற்பாடுகள் அவசியம். ஓர் ஆற்றங்கரையைகடக்க தனியே கயிறும் மரக்குற்றிகள் தான் கைவசம் இருப்பின் அவற்றை பயன்படுத்தி பாலத்தினை உருவாக்கி கரையினை அடையவேண்டும். இவற்றை மறுத்துவிட்டு நாம் மிக விரைவில் கொங்றீட் பாலம் அமைத்துதான் கரைசேர்வோம் என்று அடம்பிடித்ததால் எமது கண்முன்னே உள்ள கயிறையும் மரக்குத்திகளையும் பாவனைசெய்யாது கொங்றீட்பாலத்திற்காக காத்திருப்போமாயின் அவை உக்கி பிரயோசனமற்று போவதுமட்டுமல்ல கரையும்போய் சேர முடியாத நிலை உருவாகும். இன்றைய நிலைமைகளை கருத்தில் கொண்டு எல்லோரும் ஓன்றிணைந்து சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள ஓத்துழைப்புகளை நல்கி முடிவுகள் வரும் தருவாயில் அடுத்தகட்ட நகர்வுகளை தொடர்வதே புத்திசாலித்தனமானது. இவ்வகையில் கிடைக்கப்பெற்ற நல்ல சந்தர்பங்களை நழுவவிட்ட படிப்பினைகள் நிறைய எக்கு உண்டு. இலங்கை அரசின் அரசியல் நகர்வேயே நல்ல உதாரணமாக எடுத்துகொள்ள வேண்டும். இன்றைய இலங்கை அரசின் அபிவிருத்தி பொருளாதார திட்டங்களிற்கு ஏனைய உலகநாடுகளின் நிதி பொருளாதார முதலீட்டின் அவசியமும் கட்டாயமும் உள்ளது. இவை கருதியே தம்மீது முன்வைக்கபட்ட சிறுது கடுமையான நகலை திருத்தி தாமே ஆமோப்பிபதாக கையெழுத்து இட்டு மற்றைநாடுகளின் நற்பெயரை சம்பாதித்து கொண்டதே இலங்கைக்கு பெரிய வெற்றி. இவ்வகையில் நாமும் வழங்கப்பட்டுள்ள சிறிய மைதானத்தில் பல கோல்களை அடிப்பதற்கான தருணங்களை ஏற்படுத்துவதே சிறந்தது

Freitag, 27. Februar 2015

புலம்பெயர் தமிழரின் குறுந்தேசியவாதமும் வளர்ந்துவரும் இனவாதபோக்கும்

புலம்பெயர் தமிழரின் குறுந்தேசியவாதமும் வளர்ந்துவரும் இனவாதபோக்கும்

தமிழ் நாட்டின் தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாடல் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய கனடா வாழ் தமிழரின் சிறுமியின் பங்குபற்றல் பற்றியும் அந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிப்பு பற்றியும் பல கருத்துக்கள் கடந்தவாரத்தில் முகநூலை ஆக்கிரமித்து வந்ததினை அவதானித்திருப்பீர்கள்.

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் சிந்தனையை புடம்போட ஓர் சந்தர்பத்தினை இவ்விவாதங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நான் இங்கு தொலைக்காட்சி நிறுவனம் பதிவுசெய்த எண்ணிக்கை பற்றியோ அல்லது அவர்கள் அறிவித்த வெற்றியாளர்கள் பற்றி விமர்சிக்க வரவில்லை. மாறாக அறிவிக்கப்பட்ட முடிவின் பிற்பாடு புலம்பெயர் தமிழ் சமூகம் இந்நிகழ்வினை பார்த்த முறைபற்றியும் எழுப்பப்ட்ட போர் முழக்கங்கள் பற்றியுமே எனது பதிவில் ஆராயவுள்ளேன்.

எல்லாவற்றுக்கு முன்னதாக இந்நாடுகளில் தஞ்சமடைந்த எம்மவரின் நிலையை பற்றி ஓர் மீள் நினைவு செய்யவேண்டியுள்ளதுபல ஐரோப்பிய நாடுகளில் எம்மவர்கள் தஞ்சம் புகுந்த போது ஓர் குறிப்பிட்ட காலம் இருந்து விட்டு நாடு திரும்புவோம் என்ற எண்ணமே எம்மில் பெரும்பாலனோரை ஆட்கொண்டிருந்தது. பலர் தமிழர் தம்மை 
தொழில்ரீதியில் இச்சமூகத்துடன் இலகுவாக இணைத்துகொண்டிருந்தனர். இந்நாடுகளின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மனிதவலுவின் தேவை எழுந்திருந்தபோது நிரந்தர வதிப்பிட அனுமதியை வழங்கி தமது தேவைகளையும் இவ் அரசுகள் பூர்த்தி செய்து கொண்டது. இந்நடவடிக்கையானது எம்மவரின் இருப்புக்களையும் நிரந்தரமாக்கியது

இனவாதசக்திகளினால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் மூழ்கிப்போன பல பிரசைகளினாலும் புதியநாஐிகளினாலும் பல இன்னல்களை நேர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் பல சவால்களையும் எதிர்நோக்க வேண்டி இருந்தது. இவற்றை எல்லாம் எம்மவரின் தனியே தொழில்ரீதியான இணைவாக்கமும் எதிர்பின்மை பண்பும் இவற்றை தவிடுபொடியாக்கியதுஇவற்றிற்கு மேலாக எமது இரண்டாவது தலைமுறையினர் கல்விபயின்று இந்நாடுகளில் அனைத்து துறைகளியும் கால் பதித்துள்ளனர். அதுமட்டுமல்லாது உள்ளுராட்சி மகாணசபை பாரளுமன்ற அரசியலிலும் பங்குபெற்றும் தேர்தல்களிலும் போட்டிபோட்டும் வெற்றிபெற்றுள்ளனர். இங்கு தான் எனது முதல் விமர்சனம் ஆரம்பமாகின்றது. இந்நாடுகளில் நடைபெற்றதேர்தல்களில் இந்நாட்டு பூர்விக பிரசைகளின் பெரும்பாண்மையான வாக்குகளே எம்மவர்களின் வெற்றியை  தீர்மானித்தது. ஓரு கணம் இந்நாட்டு பிரசைகள் இந்நாடுகளில் பிழைக்கவந்தவர்கள் எம்மை ஆழ்வதா என்று கருதியிருந்தால் ஐரோப்பா கனடா நாடுகளில் ஓரு தமிழரும் வெற்றிபெற்றிருக்க  இயாலாது. இந்நாட;டு பிரசைகள் பிராசா உரிமை பெற்றவர்களிற்கு தம்மை போலவே அரசியலில் பங்குபெறும் சகல உரிமைகளும் உள்ளது என்னபதனை மனதார ஏற்று கொண்டதன் மூலமே எம்மவரின் அரசியல் பிரவேசம் இலகுவாகியது

தொலைக்காட்சி போட்டியில் கலந்து கொண்ட சிறுமி எம்மினத்தவர் என்ற நோக்கத்திலேயே ஓருவர் நூற்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அள்ளி வழங்கி அவரே வெல்ல வேண்டுமென ஆதங்கமும் வெறியும் கொண்டனர். இங்கு பங்கெடுத்த பிள்ளைகளின் திறமையை பாராது
தனியே இனம் மட்டுமே முந் நிலைப்படுத்தப்பட்டது. தொலைக்காட்சி நிறுவனம் தனது சந்தைப்படுத்தும் தந்திரத்தினை முன்நிறுத்தி இரண்டாவது இடத்தினை வழங்கியதுமுதலிடத்தினை பெற்ற தமிழ் அல்லாத கன்னட சிறுமியின் வெற்றியை தமிழுக்கு ஏற்பட்ட கழங்கமாக கருதி பல புலம்பெயர் தமிழர்கள் தமது பதிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். தமிழ் நாட்டில் உள்ள மக்கள் இவ்வாறு இனவாதத்தினை விதைக்கவில்லை. ஆனால் தஞ்சம் புகுந்த எம்மவர் விதைத்தனர். அதுமட்டுமல்லது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்களிற்கு புலம்பெயர் நாடுகளில் தடை எனவும் அறிவித்தனர். அதற்கு மட்டுமே ஏகப்பட்ட லைக்குகள் வேறு. தாம் தென்னிந்திய கலைஞர்களை அழைத்து புலத்தில் நிகழ்ச்சி நடத்தலாம் ஆனால் இதென் இந்திய கலைஞர்கள் இலங்கைக்கு சென்று கலை நீகழ்ச்சிகளில் பங்குபற்றினால் அது ஓர் இனத்தூரோகமாக பார்க்கும் போக்கு வளர்ந்துவருகின்றது. ஆக மொத்தத்தில் இலங்கை வாழ் தமிழர்களை குத்தகைக்கு எடுத்த ஆதிக்க மனோபாவம் வளர்ந்துள்ளது. 

ஓர் இனம் அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் தமிழ் பேசும் பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தால் எம்மவரால் இனவாதகருத்துக்கள் விதைக்கப்பட்டு அச்சமூகம் சொல்லனா துன்பங்களை நேர் கொண்டிருக்கும்  என்பதனை பதிவிடப்பட்ட குறுந்தேசியவாத கருத்துக்கள் எடுத்துரைக்கின்றன.

தமது சொந்த இடங்களை விட்டு நாடுமாறிய சமூகங்கள் தமது அடையாளங்களை காப்பாற்றுவதாக கருதிக்கொண்டு அதி தீவிர இனவாதிகளாகவும் மதவாதிகளாக மாறியுள்ள பல எனைய சமூகங்களையும் ஐரோப்பிய நாடுகளில் காணமுடிகின்றது

இலங்கையில் விதைக்கப்பட்டிருந்த இருதரப்பு இனவாதத்தினால் பெரும்பாண்மை சமூகமும் சிறுபாண்மை சமூகங்களும் இணைவாக்கம் அடையாது தமக்கிடையிலான இடைவெளியை அதிகரிக்கசெய்துள்ளது. இவ்வகைபோக்கு தமிழ்நாட்டில் குறைவாகவே தென்படுகின்றது. ஆனாலும் தமிழ்நாட்டில் தஞ்சம்புகுந்துள்ள இலங்கைதமிழரின் வாழ்வு வளம்பெற இயலாது அகதிவாழ்வாகவே தொடர்கின்றது. நீண்டகாலமாக வாழும் ஓர் சமூக குழுமத்திற்கு அரசியல் உரிமை இந்தியாவில் மறுக்கப்பட்டுள்ளதானாலேயே இலங்கை தமிழர்களிற்கு இவ் அவல நிலமை. இவ்வகையான உரிமை மறுப்புகளாலேயே இலங்கை வாழ் மலையகமக்களுக்கும் மிகவும் இக்கட்டான வாழ்வாதார நெருக்கடிகளை முகம்கொடுக்கின்றனர். 

புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் பலர் வேறு சமூகங்களை குறைத்து மதிப்பிடுவதும் கள்ளர் கொள்ளையர் என பட்டங்கள் கொண்டு அழைப்பதும் தொடருகின்றது. கறுப்பினத்தவரை கண்டால் எம்மவரில் பலர் கிட்ட நெருங்கமாட்டார்கள். ஆனால் அவர்களோ எம்மைக் கண்டவுடன் சகோதரா என்பார்கள். தம்மை மட்டுமே உயர்ந்தவர்களாக கருதும் பண்பு எம்மவர்களிடம் அதிகமாக காணப்படுகின்றது. தமது பிள்ளைகள் இந்நாட்டுப்பிள்ளைகளுடன் விளையாடுவதை பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். எம்மைப்போல் தஞ்சம் அடைந்த இன்னுமோர் சமூகத்தின் பிள்ளைகளுடன் விளையாடவிடுவதில்லைஇதேபோல் பல ஐரோப்பிய தமிழர்கள் வீடுகள் வாங்கும் பொழுது அக்கம் பக்கத்தில் இந்நாட்டு பிரஐகள் இருந்தால் பெருமையாக நினைப்பார்கள்இந் நடவடிககைள் எம்மவரில் உட்புகுந்துள்ள குறுந்தேசியவாதத்தினையே புலப்படுத்துகின்றது

சுவிற்சர்லாந்து நோர்வே டென்மார்க் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்த அகதிகளை அந்நாட்டு அரசுக்கள் ஆங்காங்கே வேவ்வேறு பிரதேசங்களிலேயே பரவலாக குடியமர்த்தினர். இந்நடவடிக்கையின் பலனாக புலம்பெயர் தமிழர்கள் இந்நாட்டு பிரசைகளுடன் குறைந்தபட்சம் தொடர்புகளை பேணும் சந்தர்பங்களை வழங்கியது. ஆனால் லண்டன் பாரிசு ரொரண்டோ நகரங்களில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் தமக்கென வேலியிட்டு அந்நாட்டு பிரசைகளுடன் தொடர்புகளே அற்று தனியே தமது இனங்களுடனேயே தெடர்புகளை பேணிவருகின்றனர். 

நான் ஓருதடவை பரிசில் பேரரூந்தில் இல் சென்று கொண்டிருக்கும் போது ஓரு கறுப்பினத்தவர் மிகவும் சத்தமாக தொலைபேசியில் உரையாடிக்கொண்டருந்தார் அதே இனத்தை சேர்ந்தவர் சத்தமாக உரையாடுபவரை கடுமையாக திட்டினார். தமக்கு மிகவும் சத்தமாகவுள்ளது மெதுவாக பேசுமாறு கடுமையாக தெரிவித்தபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் அதிகரித்தது. இதன் போது ஓர் பிரஞ்சு நாட்டவர் தலையிட்டு அவர் சத்தம் போட்டு பேசியவருக்கு ஆதரவாக பேசி இது ஓர் பொது போக்குவரத்து வண்டி அவரிற்கு தொலைபேசுவதற்கு உரிமையுள்ளளது உங்களிற்கு பிடிக்கவில்லை என்றால் சற்று தள்ளி நில்லுங்கள் ஆனால் அவருடன் சண்டை போடவேண்டாம் என சொல்லி இரு தாரரையும் சமாதனப்படுத்தி இருந்தார். நான் அவரது கருத்து சுதந்திர பண்பை எண்ணி வியந்துபோனேன்

இலங்கையில் வாழும் தமிழர்களது அபிலாசைகளையும் நெருக்கடிகளையும் புரியாது தாம் பேசும் அரசியலையே அவர்களும் பேச வேண்டுமென எதிர்பார்ப்பதும் அதிகாரப் போர்வையில் கட்டளையிடும் போக்கும் வளர்ந்து வருகின்றது. இவ்வகை செயற்பாடுகளால் புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கை வாழ் தமிழ்சமூகத்தின் சிந்தனையிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கின்றது. இரண்டாவது தலைமுறையினர் தம்மை இந்நாடுகளில் இன்னமும் இணைத்துக்கொள்ளும் தன்மையே அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது


நாமும் எவ்வித அரசியல் உரிமைகளுமற்று இரண்டாந்தர பிரசைகளாக கருதி ஓதுக்கப்பட்டிருந்தால் இன்று எமது குழந்தைகளின் எதிர்காலங்கள் எவ்வாறு அமைந்திருக்கும்? ஆனாலும் எதிர் காலங்களில் இனவாதங்கள் தலைதூக்காது என்பதனை உறுதிப்படுத்த இயலாது. சம கால அரசியல் பொருளாதார நிலைமைகளே இதனை தீர்மானிக்கும்

புலம்பெயர் தமிழர் எப்பவுமே இனவாதத்திற்கு எதிரானதும் சிறுபாண்மை இனங்களின் உரிமைக்கு ஆதரவான அரசியலையே பிரதித்துவபடுத்த முன்வர வேண்டும். குறுந்தேசியவாத கருத்துக்களை விதைப்பது மேலும் மேலும் பாரிய மூர்க்கத்தனமான பல் வேறுவகையான இன ஓடுக்குமுறைகளை முகங்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்களும் ஆபத்துக்களுமே அதிகரிக்கும். இது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிற்கு மட்டுமல்லாது இலங்கையில் வாழும் தமிழர்களையும் பெரிதளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

Freitag, 23. Januar 2015

தோழர் யோகாவின் அரசியல் சமூக வாழ்வு பற்றிய எனது பார்வை


(புலம் பெயர் நாடக எழுத்துருக்கள் நூல் அச்சுக்கு தயார் நிலையின் போது தோழர் தன்னைப்பற்றிய ஓர் குறிப்பை எழுதித்தருமாறு கேட்டிருந்தார். அவரின் வேண்டுகோளிற்கு இணங்க நான் கீழ் வரும் குறிப்பினை எழுதி தோழருக்கு அனுப்பிவைத்திருந்தேன். என்னால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த விமர்சனத்துடனான அறிமுகம் பார்வை பிரசுரிக்கப்பவாமல் தவிர்க்கப்பட்டிருந்தது. தோழர்  தன்னால் குறித்த நேரத்தில் எனது மின் அஞ்சலை பார்க்க முடிவில்லை என்ற காரணத்தினை முன்வைத்திருந்தார். இக் காரணத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் சம்பந்தபட்ட பதிவு சுவிற்சர்லார்ந்து அரசியல் சமூக வரலாற்று பதிவின் தேவை கருதி இதனை பிரசுரிக்கின்றேன். இதனை ஓர் தனிப்பட் விரோதமாக கருதாமல்  வாசகர்கள் குறிப்பில் இடம்பெற்றிருக்கின்ற அரசியல் வாழ் முறைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.)


தோழர் யோகா சுவிற்சர்லாந்து புலம்பெயர் சமூகத்தில் ஓர் முக்கிய சமூக அரசியல் பங்காளி. தோழர் இலங்கையில் பல் வேறுபட்ட அரசியல் இலக்கிய அமைப்புக்களில் முக்கிய அங்கத்துவராக இருந்ததினால் அவரின் முதிர்ச்சியும் அனுபவமும் இந்நாட்டில் புலம்பெயர்ந்த இளைஞர்களிற்கு ஓர் அனுபவ பகிர்னைவ கொடுத்தது. தோழரை நான் தழிழீழ விடுதலைக் கழகத்தில் (PLOT ) செயற்பட்ட போதே அறிமுகமானார். தோழர் அக் காலப்பகுதியில் தன்னை எந்தவொரு அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆனாலும் அக்காலகட்டத்தில் சுவிற்சர்லாந்தில் செயற்பட்டு வந்த ஈழ விடுதலை அமைப்புக்களுடன் தனது தொடர்புகளை கொண்டிருந்தார். இயக்கங்களிடையே ஓர் தொடர்பு பாலமாகவும் செயற்பட்டு வந்துள்ளார். தளத்தில் விடுதலை இயக்கங்கள் தமக்குள் மோதிக்கொண்ட போதும் புலத்தில் நிலவிய சுமூக நிலைமைகளிற்கு தோழரின் செயற்பாடுகளும் ஓர்முக்கியமான காரணங்களாகியது.

வேறுபட்ட கருத்தோட்டங்கள் விரிவு பெற தோழரும் தனது கருத்துக்கனை பதிவு செய்யவேண்டிய தேவை உருவானது. இதன் அடிப்படையில் தோழர் கண்ணணுடன் இணைந்து ஒண்றியம் எனும் சிறு பத்திரிகையினை கொண்டுவந்தார். இச்சிறுபத்திரிகை சமூகத்தின் தேவைகளையும் இணைவாக்கம் ஈழவிடுதலை இயக்க அரசியல் சர்வதேச அரசியல் என பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டு வெளிவந்தது. புலத்தில் செயற்பட்ட அனைத்து ஈழ விடுதலை இயக்க அங்கத்தவர்களிற்கு ஓர் அரசியல் பார்வையை கொடுத்தது.

தளத்தில் கழகத்தில் உட்கட்சி போராட்டமும் உட்கொலைகளும் தாண்டவம்  ஆடிய போது நானும்  என்னுடன்  இணைந்து செயற்பட்ட சக தோழர்கள் அனைவரும் அமைப்பை விட்டு வெளியேறி இருந்தோம். இக்காலகட்டத்தில் தோழரின் சந்திப்புக்கள் பல விடயங்களை அலசி ஆராய உதவியது. இதன் விளைவுகளே காலப்போக்கில் சிறு சஞ்சிகையின் அவசியமும் விடுதலை இயக்கங்களின் தவறான போக்கால் அதிருப்தி உற்ற அங்கத்தவர்களை இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆதன் வெளிப்பாடே வாசகர்வட்டம் மனிதம் வீடியோ சிறுபத்திரிகை பாரதி கலைக்குழு என உருவெடுத்தது.

தோழரின் செயற்பாடு மனிதம் ஆசிரியர் குழவில் முக்கியத்துவம் பெற்றது. மனிதம் குழவில் இருந்து பல ஆக்கங்களையும் அரசியல் பார்வைகளையும் தொகுத்திருந்தார். மனிதத்தினை ஆட்கொண்டிருந்த அதிதூயவாதத்திற்கு எதிராக தோழரின் கருத்துக்கள் சமநிலையை பேண பெரிதும் உதவியது. மனிதம் சஞ்சிகை ஐரொப்பிய நாடுகளிலும் இலஙகையிலும் இந்தியாவிலுள்ள வாசகர்களிடம் பெரிய எதிர்பார்ப்புக்களை வளர்த்திருந்தது. இவ் உயர்ந்த பட்ச எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் நிலையில் உள்கட்டுமாணம் நிலவவில்லை. இதனால் உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டிய தருணம் உருவான போது மனிதம் குழு உடைந்தது.

மனிதத்தின் உடைவினை தொடர்ந்து பல மனிதம் குழு உறுப்பினர்கள் பல அரசியல் பின்புலங்களால் விடுதலைப்புலிகளை ஆதரிக்க  தொடங்கினர். அவ்வகையில் தோழரின் விடுதலைப்புலிகள் மீதான ஆதரவு எம்மவர் பலரிற்கு ஆச்சரியத்தினை கொடுத்தது.

பின்னர் தோழர் விடுதலைப்புலிகளின் கலாச்சார பிரிவினருடன் இணைந்திருந்த நாடக பயிற்சிக்கல்லூரியில் இணைந்து பல நாடகங்களை எழுதி மேடை ஏற்றி இருந்தார். ஏனது பார்வையில் தோழரின் நாடகங்களில் அவரின் தனித்துவம் மழுங்கடிக்கப்பட்டு அன்று மேலோங்கியிருந்த தேசியவாதப்போக்கே ஆக்கிரமித்திருந்தது.

புலிகளின் தோல்விக்கு பின்னரும் தோழர் தனது சமூக அரசியல் நடவடிக்ககைளை தொடர்ந்தார். இக்காலகட்டத்தில் தோழர் ராஐனுடன் இணைந்து புலிகளின் தோல்விகளை விமர்சித்தும் சர்வதேச அரசியல் போக்குகள் பற்றியும் எழுதத்தொடங்கினார். இக்காலப்பகுதிகளில் வெளியான ஆக்கங்களில் தோழரின் தெளிவான தனித்துவ பாங்கு காணாமல் போயிருந்தது.

நாமும் தோழரும் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டிய புதிய தேவைகள் உருவாகின. உள்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட பல போராளிகளும் பொதுமக்களும் அங்கவீனமுற்றிருந்ததுடன் வாழ்வாதாரம் இன்றி தவிர்த்தனர். இந்நிலைமைகளிற்கு ஏதொ ஓர் வழியில் நாமும் காரணமாக இருந்தோம் என்ற குற்ற உணர்வின் வெளிப்பாடாக Support எனும் அமைப்பு தோற்றுவிக்கப்ட்டது. இவ்வமைப்பிலும் தோழரின் செயற்பாடுகள் மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

Donnerstag, 22. Januar 2015

சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும்


மொழிபெயர்ப்பு (க.சுதாகரன் சுவிற்சர்லாநது 3.11.2011)

சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும்...

பொதுவாக இளம்பராயத்தினரின் மன அழுத்தத்தினை பெரியவர்கள் கண்டறிவது மிகக் கடினமானது. ஆனாலும் பெரும்பாலும் அவர்களின் அன்றாட நடைமுறையும் அதனால் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடுகளுமே அவர்களது மன அழுத்தினை கண்டறிவதற்கான இலகுவான பாரம்பரிய முறையாக இருந்துவருகிறது. இளவயதினரின் பருவமாற்றங்கள் புதிய விடயங்களை தோற்றுவிக்கின்றன. காதல் பிரிவு புதிய உறவுகள் அல்லது பெற்றோரிடமிருந்து ஏற்படும் பிரிவுகள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் இளையோரிடம் நம்பிக்கையீனத்தினை தோற்றுவிக்கின்றன. சிலவேளைகளில் அதுவே மன அழுத்தத்தினை தோற்றுவிக்கின்ற காரணியாகவும் அமைகின்றது. சிறார்கள்; இவ்வாறு நெருக்கடியான நிலைமையில் கவலையின் நிமித்தம் சோர்வடைவதற்கு மாறாக, தமது மனத்தாக்கங்களை அதிதீவிர கோபத்தினால் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் பதின்ம வயதினர் தமது மனத்தாக்கங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில், அவர்களை மன அழுத்தம் இயல்பாக சூழ்ந்துகொள்கின்றது. இது அவர்களிற்கு வயிற்று நோ அல்லது தலைவலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மனஅழுத்தத்தின் அறிகுறிகள்

சிறுவர்கள் 1-3 வயதுப் பிள்ளைகளிடம்...


சிறுவர்கள் 1-3 வயதுப் பிள்ளைகளிடம் காணப்படும் கீழ்வரும் குணாம்சங்கள் அவர்களிடம் மறைந்திருக்கும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் காரணிகளாகக் கொள்ளப்படுகின்றன.

- கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படல்

- எப்பொழுதும் பயப்படுவது அல்லது அதிகூடிய கூச்ச சுபாவத்தைக் கொண்டிருத்தல்

- மிக விரைவில் அழுவது

- விளையாடுவதற்கு விருப்பமின்றி இருத்தல்

- கூடுதலாக பெருவிரல் சூப்புதல்

- பாலியல் உறுப்புடன் அதிகம் விளையாடுதல்

சிறுவர்கள் 3-6 வயதினர்க்கான வெளிப்பாடுகள்


- கவலையுடன் இருப்பதும், உணர்வு ஏதுமின்றி சோர்வுடன் காணப்படுதல்

- முகங்கொடுக்காது பின்வாங்குவது, மிக விரைவில் ஆத்திரமடைவது

- பயங்கரக் கனவினால் அவதியுறுவது, இரவில் அடிக்கடி நித்திரையிலிருந்து எழுவது

- நண்பர்கள் இன்மை, விளையாடுவதில் ஆர்வம் காட்டாமை

- பொதுவாக எதிலும் விருப்பமின்மை

- உடல் பருமன் குறைதல் அல்லது அதிகரித்தல்

பாடசாலை செல்லும் வயதினர் - வயது 7 இலிருந்து


- கவலையாக இருப்பதாகக் கூறுவது

- தற்கொலையைப் பற்றி அதிகம் கதைத்தல்

- பாடசாலை வேலைகளில் கடினம்

- குற்ற உணர்வு

- எவற்றிலும் நம்பிக்கையீனம்

இளையோர் (பதின்ம வயதினர்)


- தன்னம்பிக்கையின்மை

- கூட்டு முயற்சிகளில் கலந்துகொள்ளாமை அல்லது அவற்றை தவிர்த்துக் கொள்ளல்

- மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை இன்மை

- கல்விவழி முன்னேற்றத்தில் வீழ்ச்சி

- நித்திரையின்மை அல்லது பசியின்மை

- தானாக தனது உடலில் பல காயங்களை ஏற்படுத்துவது

- தற்கொலை பற்றி சிந்தித்தல்

இவ்வாறான குணாம்சங்களுக்கு உட்படும் பல பிள்ளைகளை சோம்பேறிகள் அல்லது கோபக்காரர்களாக பெற்றோரும் சரி அல்லது மற்றையோரும் சரி சாதாரணமாகக் கருதுவதுண்டு. மாறாக அவர்களிடம் மனது சம்மந்தப்பட்ட ஏதோ ஓரு பிரச்சினை இருப்பதாகக் கருதுவதில்லை. அதைக் கண்டுபிடிக்க முனைவதுமில்லை. இந்நிலையில் அப் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய பேருதவி, பெற்றோர்களாகிய நாங்கள் அவர்களுடன் எதையும் கலந்து ஆலோசிப்பதற்கான தயார்நிலையில் இருக்கின்றோம் என்பதை தெரியப்படுத்துவதுதான். பிள்ளைகளும் அதற்கான தமது ஓத்துழைப்பினை வழங்க வேண்டியதும் முக்கியமே!

Hilfe für depressive Kinder (மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் பிள்ளைகளுக்கான உதவிகள்) என்ற நூலை எழுதிய Lawrence L. Kerrns என்பவர் இளம் பருவத்தினருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று 

விபரிக்கிறார். முக்கியமான பத்து விடயங்களை அவர் குறிப்பிடுகிறார்.

1. உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது, உங்கள் எதிர்பார்ப்புக்களை தெட்டத்தெளிவாக தெரியப்படுத்துவது, உங்களுடன் கலந்துபேசுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது.

2. பிள்ளைகளை எள்ளி நகையாடும் சந்தர்ப்பங்களை தவிர்த்துகொள்ளல், அல்லது அவ்வகையான சந்தர்ப்பங்களில் உங்கள் குழந்தைகளை தற்காத்துக் கொள்ளல்.

3. பிள்ளைகளுடனான உங்கள் ஆர்வத்தினை தெரியப்படுத்துதல், அவர்கள் சிந்திக்கும் அல்லது அச்சப்படும் விடயங்களை கேட்டு அறிந்துகொள்ளல், அவற்றில் அக்கறை எடுத்துக்கொள்ளல்.

4. பல்வேறுபட்ட சூழல்களுக்கு ஏற்ப வெற்றியை நோக்கி வழிநடத்தல். அதாவது பாடசாலைக் கல்வியில் கூடிய ஆர்வத்தை நோக்கியும்;, விளையாட்டில் வெற்றியை நோக்கியும், நட்புவட்டங்களில் நட்பை வளர்ப்பதிலும் வெற்றியை நோக்கி வழிநடத்துதல்.

5. குழந்தைகளிடம் (இழிவுபடுத்தல், மற்றவர்களுக்கு முன்னால் கண்டித்தல் போன்ற) எதிர்நிலை விமர்சனங்களைத் தவிர்த்தல். மிகத் தெளிவாக, முடிந்துபோன விடயங்கள் மீதான அபிப்பிராயங்களை அவர்களுக்கு சாதகமான முறையில் சொல்லும்போது அவர்களிடம் இருக்கும்; பயம் நீக்கப்படுகின்றது. சரியான விடயங்களில் பிள்ளைகள் மனத்தை ஒருநிலைப் படுத்தும்போது அதைப் பாராட்ட வேண்டும், மெச்ச வேண்டும். 

6. பிள்ளைகள் மீதான உங்களுடைய எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும். தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு தேவையற்ற பயத்தினை பிள்ளைகள் மத்தியில் தோற்றுவிக்கும். பிள்ளைகளின் திறமைகளையும், திறமையின்மைகளையும் அவதானித்து வைத்துக் கொள்ளுதல் பெற்றாரின் முக்கிய கடமையாகும்.

7. பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை ஏற்றுக்கொள்ளப் பழகுதல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களாக இருப்பின், அதனை சகித்துக்கொண்டு நட்புரீதியில் உங்கள் அபிப்பிராயத்தினை தெரிவித்துக் கொள்ள வேண்டும். 
பிள்ளைகளுக்கு ஆர்வமில்லாத வீட்டுப்பாடங்களில் இணைந்து உதவிசெய்து, அவ்விடயத்தில் ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டும்.

8. பிள்ளைகளிடம் தாமே தனியே வேலைகளைச் செய்ய விடவேண்டும.; அவர்களால் சரிவரச் செய்ய முடியாவிடின் உங்கள் உதவியைக் கொடுக்கலாம். அதன்மூலம் தன்னம்பின்கை வளர்க்கப்பட வேண்டும்.

9. அவர்களுடைய தனி அறையின் ஒழுங்கமைப்பை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். விரும்பினால் உங்களின் ஆலோசனையை வழங்கலாம். இவ்வகை நடவடிக்கைகள் முடிவெடுக்கும் தீர்மானத்தினை வளர்க்கும். 

10. உள்வாங்கும் தன்மையை அல்லது கல்விகற்கும் தன்மையை வளர்த்துவிடுங்கள். தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டைச் செய்ய கற்பிக்க வேண்டும்.

66 வீதமான இளையோர் -பிழையான வழிமுறையாக- தற்கொலையை ஓர் தீர்வாக்குகின்றனர். இவ் வழிமுறை தொடர்வதனை தடுக்க வேண்டும். “வியன்” இல் உள்ள இளையோர் சம்பந்தமான மனோதத்துவ நிபுணர் Max Friedrich தற்கொலை சம்பந்தமான தனது கட்டுரைத் தொகுப்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இப் பிரச்சினை உடையோர் தமது முகத்தை முகமூடியால் மறைத்துள்ளனர். மனஅழுத்தத்திற்கு உள்ளானவர் பலர் “எப்படி இருப்பினும் மூன்றாம் உலக யுத்தம் வரப்போகிறது, நாம் எல்லோரும் அழியப் போகின்றோம்” என குறிப்பிடுகின்றனர். இவ்வகையான கூற்றுக்களை ஓர் ஆபத்தின் அறிகுறியாகக் கருதவேண்டும் என எச்சரிக்கிறார் அவர்.
கட்டாயமாக தற்கொலைக்குச் சாத்தியமான ஓர் அபாய அறிவிப்பு உள்ளதாக குசனைசiஉh நம்புகின்றார். அதற்கான காரணம் அவர்களிடமே உள்ளது. இளையோர் அவற்றை அமுக்கி வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது தமக்கு விருப்பமான விடயங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றில் தமது ஈடுபாட்டினை நிறுத்துகின்றனர். இவர்களை நன்கு அறிந்தவர்கள் இவர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறிந்து, கலந்துபேசுவதற்கான சூழலை ஏற்படுத்துவது அவசியம். இவ் விடயத்தில் பாடசாலை நண்பர்கள், பாடசாலை வைத்தியர்கள், பாடசாலை மனோதத்துவ ஆலோசகர்கள் ஆகியோர் முக்கிய பங்காற்ற முடியும். தற்கொலைக்கு இன்னொரு முக்கிய காரணமாக பாடசாலைகளில் முகங்கொடுக்கும் பல்வேறுபட்ட துன்புறுத்தல்கல்கள்  (Mobbing) முக்கிய பங்காற்றுவதாக Fridrich குறிப்பிடுகின்றார்.

இன்னொரு மனோதத்துவ நிபுணர் Georg Fiedler கூற்றுப்படி, பலர் இது ஒரு பேசக்கூடாத விடயமாகவே கருதுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களிற்கே தெரிவதில்லை, தாம் எவ்வாறு இந்நிலைக்கு உள்ளானோம் என்று. இதனால் உடனடித்தேவையாக மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கண்டறிந்து, கலந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஆய்வுகளை அனைத்து தரப்புகளும் மேற்கொள்ளவேண்டும்.

2.5 வீத சிறார்களும் 8.3 வீத இளையோரும் மனஅழுத்தத்தினால் அவதியுறுகின்றனர். அதுமட்டுமல்லாது ஓரு வயது குழந்தை இலிருந்து மூன்று வயது குழந்தை வரைக்கும்கூட இம் மனஅழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளனர். தற்கொலை 10 வயது சிறுவர்களிடம் அனேகம் நடப்பதாக Max Friedrich அறியத்தருகின்றார். 

அதுமட்டுமல்லாது வயதுவந்தவர்களில் கூடுதலாக பெண்களே மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் எனவும், மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்களிடம் அறிகுறிகளை அறிவது கடினம் எனவும் கூறுகிறார். மனஅழுத்தம் கூடுதலாக பாடசாலை செல்லும் இளையோரையே தற்கொலைக்கு இட்டுச்செல்வதாகவும் மாசி, ஆனி மாதங்களில் ஆகக் கூடுதலாக நடைபெறுவதாகவும், இது பாடசாலை வேலைகளால் ஏற்படும் ஓய்வின்மையால் நிகழ்வதாகவும் குறிப்பிடுகின்றார். மன அழுத்தத்திற்கு உள்ளாபவர்களுக்கு ஏற்படும் நித்திரையின்மை, மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை, ஆத்திரப்படுதல், தொடர்புகளின்மை... என்பன வெளித்தெரியும் அறிகுறிகளாக உள்ளன. இவற்றிலிருந்து விடுபடுவதற்கு பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. நடனம், இசை, உடற்பயிற்சி போன்றவற்றுடன் இணைந்த சிகிச்சை முறைகளும் உள்ளன.

2011 ஜேர்மனியில் Leuphana பல்கலைகழகத்தில் 5840 பாடசாலை மாணவர்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டில், மூன்று பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள்; மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக அறியப்பட்டுள்ளது. இங்கு Gymnasium மாணவர்களை விட Real மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. அவர்களிடம் ஏற்படும் இந்தப் பாதிப்பின் வீதம் 23 இலிருந்து 33 ஆக அதிரித்துள்ளது. புலம்பெயர்ந்த வெளிநாட்டு மாணவர்களில் தனியே 36 வீதமாக அதிகூடியதாக உள்ளது. ஓர் இளம் பராயத்தவருக்கு தொடர்ச்சியாக எதிரான உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நிகழும்போது, அது அவரை சூனிய நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனால் இளையோரின் எண்ணங்களிற்கு மதிப்பளியுங்கள், சந்தர்ப்பங்களைக் கொடுங்கள், கலந்து பேசுங்கள், தேவையேற்படின் வெளி உதவியை நாடுங்கள்.

தமிழ் மொழியில் எற்படுத்த வேண்டிய மாற்றம் பற்றி ஓர் வினா?

தமிழ் மொழியில் எற்படுத்த வேண்டிய மாற்றம் பற்றி ஓர் வினா?

நீண்ட காலமாக என்னிடம் ஓர் தீர்க்க முடியாத ஓர் வினா பதிலில்லாமல் என்னகத்தில் தங்கிவிட்டது.
எனது வினா என்னவாக இருக்கலாம் என பலதையும் பத்தையும் யோசிக்காதீர்கள். விடயத்திற்கு வருகின்றேன் நான் கேட்கும் கேள்வியின் விவாதத்தில் தமிழ் மொழியில் புலமை பெற்றவர் கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
தமிழ் மொழி தனக்கே உரிய அழகான எழுத்து உருக்களை கொண்டுள்ளது. ஆனால் வழந்து வரும் கணணி தொழில்நுட்பத்தினாலும் புலம்பயர்ந்து வாழும் தமிழ்மக்களின் எண்ணிக்கையாலும் நீண்ட கால நோக்கில் தமிழ் மொழியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அருகி விடும் என்ற அச்சமும் என்னிடம் உள்ளது. கணணியில் எழுதப்படும் படைப்புக்கள் கணணி மொழிபெயர்க்கும் மென்பொருளால் இலகுவில் மொழிபெயர்க்க முடிவதில்லை. அதுமட்டுமல்லாது எமது இனம் ஓர் சிறுபாண்மையாக பல நாடுகளில் சிதைந்து போயுள்ளதாலும் தமிழ்மொழியை பேசுபவர்களின் அடுத்த சந்ததிகள் இம் மொழியினை பாவனைக்குட்படுத்தாது போகும் சந்தர்ப்பங்களே அதிகரித்து வருகின்றது.
மேலே முன்வைத்த கருத்தின் அடிப்படையில் ஏன் தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தினை ஆங்கில எழுத்து வடிவாமாக மாற்றி புதிய இலக்கண விதிகளை உருவாக்களாமே? இவ்வகையில் ஓர் மாற்றத்தினை கொண்டு வந்தால் இம்மொழி நீண்டகாலம் பாவனைக்குட்பட்ட மொழியாக இருக்கும் என்பது ஓர் நம்பிக்கை. ஓரு மொழிக்கு இரண்டு எழுத்துவடிவங்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் வழக்கத்திலுள்ள எழுத்துருக்களையே பயன்படுத்தலாம். புலத்தில் ஓர் பரீட்சார்த்தமாக ஓர் புது முயற்சியை ஆரம்பித்து பார்க்கலாமா?
எனது இந்த கேள்விக்காண பதிலை எல்லோரிடமிருந்து எதிர் பார்க்கின்றேன். தயவு செய்து இதனை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

https://www.metype.com/page/aHR0cHM6Ly9zd2FyYWp5YW1hZy5jb20vY3VsdHVyZS93aWxsLXRhbWlsLXRha2UtdG8tbGF0aW4=?share=c2hhcmVfdHlwZT1jb21tZW50JmNvbW1lbnRJZD04ODk1OQ==

Sonntag, 18. Januar 2015

மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது உள்நோக்கம் கொண்டு சுமர்த்தப்பட்ட கொலைப் பழிக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பற்றிய எனது பதிவு.

மனிதம் குழு மீதும் தோழர் ரவி மீது உள்நோக்கம் கொண்டு சுமர்த்தப்பட்ட கொலைப் பழிக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பற்றிய எனது பதிவு.



தோழர் அசோக் சுமத்திய குற்றசாட்டிற்கு தோழர் ரவி எழுதிய பதில் கட்டுரையான வேதாளம் மீண்டும் முரங்கமரத்தில் என்ற பதிவினை எனது முகநூல் நண்பர்களிற்காக இங்கு மீள் பிரசுரம் செய்கின்றேன். இவ்விடயத்தில் எனது கடமைப்பாட்டையும் பொறுப்புணர்வையும் கவனத்தில் எடுத்து எனது சுய விளக்கத்தினையும்  இங்கு பதிவு செய்கின்றேன். 2005 இலும் இதற்கான விளக்கத்தினை தேனி இணைய சஞ்சிகையில் பதிவு செய்திருந்தேன் என்பதனையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.

மனிதம் பற்றி

பல விடுதலை இயக்கங்களிலிருந்து கருது;து முரண்பாட்டால் வெளியேறிவர்களும் நீண்ட காலமாக அரசியலிலும் பல்வேறு சமூக தளங்களில் வேலைசெய்தவர்களும் புதிதாக அரசியல் களம் புகுந்தவர்களும் ஓன்று கூடியே வாசகர் வட்டம் என்ற படிப்பு வட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு நாம் ஓர் கூட்டுத்தலைமை முறமையையும் சுழற்சிமுறையிலான பொறுப்பெடுத்தலையும் முழமையாக உள்வாங்கி நடைமுறைப்புடுத்தி வெற்றியும் கண்டோம். வாசகர் வட்;டம் அரசியல் இலக்கியம்
சமூகம் பற்றிய கற்றலையும் விவாதங்களை மேற்கொண்டு தனது அரசியல் இலக்கிய பார்வையினை கூர்மைப்படுத்தியது. இதன் வெளிப்பாடாகவே மனிதம் வீடியோ சஞ்சிகையும் அதனைத்தொடர்ந்து மனிதம் சஞ்சிகையும் வெளியாகின. இச் சஞ்சிகையில் வெளியான ஆக்கங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள வாசகர்களிடம் ஓர் பெரிய எதிர்பார்பினை உருவாக்கியது. இச் சமகாலத்தில் தலைமறைவு கட்சியான தீப்பொறியிலும் கணிசமான மனிதம் தோழர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர்.

நான் 1994 களில் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக தீப்பொறியை விட்டு வெளியேறி இருந்தேன். இதே கால கட்டத்திலேயே தோழர் ரவியும் தீப்பொறியை விட்டு வெளியேறி இருந்தார். எமது பங்களிப்பு மீண்டும் வெகுஐன அமைப்பான வாசகர்வட்டத்தில் தொடர்ந்தது. எம்மிடம் அதி கூடிய தூய்மை வாதப்போக்கு எம்மை ஆழ்கொண்டிருந்தது. இதனால் பல உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தனித்துவைக்கப்பட்டோம்.

18 வது இலக்கிய சந்திப்பு

18 வது இலக்கிய சந்திப்பு 2-3 ஏப்பிரல் 1994 ம் ஆண்டு மனிதம் குழவினால் ஓழங்கு செய்யப்பட்டிருந்தது. இச் சந்திப்பில்; கனேடிய, ஸ்கண்டி நேவிய, ஐரொப்பிய நாடுகளில் இருந்து வெளியான சிறு சஞ்சிகை ஆசிரியர்களும் இலக்கிவாதிகளும் அரசியல் வாதிகளும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் காலம் சென்ற தோழர் புஸ்பராஐhவினால் சுவிற்சர்லாந்தின் புலிகளின் பொறுப்பாளரான முரளியும் அழைத்துவரப்பட்டார். இந்நிகழ்வு மனிதம் தோழர்களிற்கு ஓர் ஆச்சரயத்தினை அழித்திருந்தாலும் தோழர் புஸ்பராஐh தனது தனிப்பட்ட தொடர்பின் மூலமே அழைத்திருக்கின்றார் என்பதனை அறிந்து எம்மை நாம் சுதாகரித்துக் கொண்டோம்.; தோழர் சபாலிங்கம் தோழர் புஸ்பராஐh முரளி ஆகியோருக்கிடையிலான சுமகமான சம்பாசனைகள் நடந்ததை மட்டும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்நிகழ்விலே வீடியோ கசட் பரிமாறப்பட்டிருக்கும் ஓர் சம்பவம நடைபெறவில்லை என்பதனை அசோக்கிற்கு இங்கு ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகின்றேன். இவ்விடயங்களில் தோழர் ரவி மிக யாக்கிரதையானவரும் மிக கடின போக்கை கொண்டவர். அசொக் தனது குற்றசாட்டில் தோழர் ரவியே கசட்டினை பரிமாறியதாக குறிப்பிடுவது அப்பட்டமான ஓர் உள்நோக்கம் கொண்ட பழிவாங்களாகவே கருதுகின்றேன்.

தோழர் சபாலிங்கத்தின் படு கொலையும் இறுதிசடங்கும்

தோழர் சபாலிங்கம் படு; கொலை செய்யப்பட்ட வேளையில் பல தீப்பொறி உறுப்பினர்கள் கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்காக தாய்லாந்து சென்றிருந்தனர். இக் கொலையை கேள்விப்பட்டு அனைத்து மனிதம் குழுவே ஆடிப் போயிருந்தது. விடுதலை புலிகளினால்; கருத்து சுதந்திரத்திற்கு எதிராக புலத்தில்  ஏவப்பட்ட முதல் கொலையாக அமைந்திருந்தது. இக்கொலையை எவ்வாறு கண்டிப்பது என்பத பற்றி கூடி ஆலோசித்தே கண்டன-அஞசலி துண்டுபிரசுரத்தினை தமிழ் Nஐர்மன் மொழியில் தயாரித்து வெளியிட்டோம். புhதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு ஏனைய ஐரொப்பிய சஞ்சிகைகளுடன் கலந்து பேசி அவர்களின் அனுமதியுடன் அமைப்புக்களின் பெயர்களையும் துண்டுபிரசுரத்தில் இணைத்துக்கொண்டோம்.

பாரிசில் சபாலிங்கத்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நான் சென்றிருந்த போது எந்த தமிழர்களை காணும் போதும் சபாலிங்கத்தினை கொலை செய்தவன் இவனாக இருக்குமா என்ற சந்தேக நோயும் இனந்தெரியாத பயமும என்னை ஆட்கொண்டிருந்தது;. அப்படி இருந்தும் உறுதியுடன் மனிதம் குழு சார்பில் நான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு இரங்கள் கூட்டத்தில் புலிகளின் இந்த அராஐக நடவடிக்கையையும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஆயத வேழ்வியினையும் வன்மையாக கண்டித்திருந்தேன்.

இறுதி சடங்கு முடிவடைந்த உடனேயே என்னையும் ஏனைய ஐரொப்பிய நண்பர்களையும் பிரான்சு நாட்டு பொலிசார் விசாரணைக்கு அழைப்பதாக தோழர் புஸ்பராஐh கூறியிருந்தார். அவரே எம்மை பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்து சென்றார். போலிசார் ஓவ்வொருவராக விசாரணைக்கு அழைத்தனர். என்னை அழைத்த பொலிசாரின் அலுவலக சுவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. சுவர்கள் அனைத்தும் எமது விடுதலை இயக்கங்களால் வெளியிடப்பட்டிருந்த துண்டுபிரசுரங்களாலும் போஸ்டர்களாலும் இயக்க தலைவர்களது புகைப்படங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது எனக்கு இன்னுமொரு செய்தியை சொன்னது. புpரஞ்சு பொலிசார் புலத்தில் நடைபெற்ற அனைத்து இயக்க செயற்பாடுகளையும் எம்மவருக்கு தெரயாமலே  நன்கு அவதானித்து வந்திருக்கின்றது என்பது புலனாணது.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் நடந்த விடயங்களை பற்றி என்னிடம் துருவிதுருவி கேட்டு அறிந்து கொண்டனர். அது மட்டுமல்லாது தோழர் சபாலிங்கத்திற்கும் எனக்குமிருந்த தொடர்பு அவர் பற்றி நான் அறிந்த அரசியல் வாரலாறுகளையும் நீண்ட மணித்தியாலங்களாக நடைபெற்ற விசாரணையில் இருந்து அறிந்து கொண்டனர். இந்த சிறப்பு பொலிசாரின் சந்தேகங்கள் சுவிற்சர்லாந்து மனிதம் பக்கம் திரும்பி இருப்பின் கொலை பற்றிய விசாரணைகள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்திருக்கும். அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சந்தேகஙகள் பற்றிய விளக்கம்

எவரோ இக் கொலையிலிருந்து தப்பிப்தற்காக 18 வது இலக்கிய சந்திப்பினையும் மனிதம் குழவையும் துணைக்கு இழுக்கின்றனர்.  தோழர் சபாலிங்கமும் புலிகளின் பொறுப்பாளர் முரளியும் கலந்து கொண்டதனை மட்டும் வைத்து கொண்டு கொலைக்கும்  மனிதத்தின் இலக்கிய சந்திப்பு வீடியோ கசட்டினையும் தொடர்பு படுத்துவதும் கொலைப் பழியை மனிதம் குழு தோழர்கள் மீது போடுவது ஓர் படும் அபத்தமான செயற்பாடாகும். இக் கொலைக்கு உடந்தையானவர்களின் பெயர்கள் அம்பலத்திற்கு வந்துவிடும் என்று பயப்பிடுவதினாலா கொலைப் பழி மனிதம் குழு மீது வந்து விழுகின்றது எனும் சந்தேகம் மேலும் வலுப்படுகின்றது.

இங்கு வேறுசில சம்பவங்களும் மனிதம் குழு புலிகளுடன் வேலை செய்தது என்ற தவறான செய்தியிலிருந்தே இவ் வகையான ஆதாரமற்ற பழிகள் தொடர்கின்றனவா எனும் கேள்வியும் என்னிடம் எழுகின்றது. இதனால் தீப்பொறியும் அதன் அரசியல் நகர்வு பற்றியும் புலிகளின் கலை இலக்கிய மேடையை அலங்கரித்த பழைய மனிதம் தோழர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டிய தேவை எழுகின்றது.

புலிகளின் ஐனநாயக மறுப்பு, அரசியல் வறுமை, இனவாத தேசியம், போன்ற கருத்துக்களுடன் தீப்பொறி பலகாலமாக மாறுபட்ட கருத்தினை கொண்டிருந்தது. ஆனால் இறுதிக்காலங்களில் புலிகளின் ஊடுருவாலால் கட்சியில் தேசியம் சம்பந்தமான நிலைப்பாடு மாற்றப்பட்டு அப்பட்டமாக புலிகளின்  போராட்ட வடிவமே சரியானது என நிறுவும் துர்பாக்கிய நிலைக்கு வந்தடைந்தனர். ஏன் நாம் தீப்பொறி கட்சி அரசியலில் மேலும் தொடர்ந்து இருக்கவேண்டும் கேள்வியை பல தீப்பொறி; தோழர்கள் எழுப்பியிருந்தனர். இதன் விளைவு புலிகளுடன் இணைவதே சரியென கருதி இறுதிக்காலங்களில் புலிகளுக்கு நிதியை வழங்கி புலிகளின் போராட்டத்தினை ஊக்குவித்தனர். ஆனால் இவ்வாறு ஈடுபட்ட பல தோழர்கள இன்று; தமது பிழையான  அரசியல் நகர்வினை உணர்ந்து கொண்டுள்ளனர்.

அதே போல் கலை இலக்கியங்களில் ஈடுபட்ட ஓருசில தோழர்கள் மனிதத்தின் உடைவிற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் கலை இயக்க பணிகளுடன் தம்மை இணைத்து தமது ஆக்கங்களை விடுதலைப்புலிகள் மேடைகளில் மேடை ஏற்றிவந்தனர்.

அரசியலில் கருத்து பார்வை மாற்றங்கள் சூழ்நிலைகளிற்கு ஏற்ப மாறுபடுவது ஓன்றும் புதிதல்ல. ஆனாலும் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் தம்மால் முன்வைக்கப்பட்ட அடிப்படை முற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அமையுமாயின் அதிலிருந்து வெளியாகுவதே சிறந்த செயற்பாடாகும். இந் நகர்வுகள் என்றும் சரி என நியாயப்படுத்துவது ஓர் பிழையான அரசியல் நடவடிக்கையாகும.;

அரசியல் பார்வையில் வேறுபாடான கருத்துக்களையும்
முரண்பாடுகளையும் கொண்டிருந்தாலும் அடிப்படையில் எக் காலகட்டத்திலும் நானும் தோழர் ரவியும் புலிகளின் அரசியலை விமர்சித்தும் நிதியினை வழங்காது நேரடியாக முரண்பட்டவர்கள் என்பதனை தோழர் அசோக்கிற்கு ஞாபகபடுத்த விரும்புகின்றேன்.

ஆவணப்படுத்தல்

எமது செயற்பாடுகளில் நடைபெற்ற பல விடயங்களை நாம் ஆவணப்படுத்தவில்லை என்பதே எமது மிகப்பெரிய தவறாக உணர்கின்றோம். எமது கடந்தகால அரசியலை வைத்து பிரமுகமாகும் நோக்கமும் எதிர் கால திட்டமும் எம்மை ஆட்கொண்டதில்லை. ஆவணப்படுத்தாமல் போனதிற்கான இதுவும் ஓர் காரணமாக அமைந்துள்ளது. இது ஓர் வரலாற்று தேவை என்பதனை நாம் தற்பொழுது பல தடைவைகள் உணர்ந்துள்ளோம்.

வேண்டுகோள்

இறுதியாக ஒன்றை மட்டும் வலியுறுத்த ஆசைப்புடுகின்றேன். நாம் பலர் பல்வேறு பட்ட தளங்களில் இருந்து செயற்பட்டாலும் இணையக் கூடிய பல புள்ளிகல் எம்முன்னே நிறையவே உள்ளது. ஆகவே அடிப்படை நம்பிக்கைகள் தளராது பார்து;துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் இலக்கியதளங்களில் ஈடுபடும் தோழர்கள் மீதுள்ள முன் நிபந்தனையாக அமைகின்றது.